Also Watch
Read this
சென்னை, கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவரால் சிறுவன் கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் விஜய் எந்த குழந்தைகளை வைத்து வாக்கு சேகரித்தாரோ, அதே குழந்தைகளுக்கு தவெக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

அதிர்ச்சி தரும் சம்பவம்
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
சென்னை, கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூன்று நபர்கள், சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் தகவல், மிகுந்த அதிர்ச்சி தருகிறது. தன்னை தற்காத்துக் கொள்ள, டிவி ரிமோட்டால் காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்த சிறுவன், புகார் அளித்து உள்ளார்.

அச்சமூட்டும் குற்ற செயல்கள்
தமிழகத்தில், நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை, மிகுந்த அச்சமூட்டுகிறது. முதல்வர் அவர்களே, எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ? அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் என்று, நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை அரசு வெளியிட்டது. இது, மற்றும் ஒரு சம்பிராதய கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ? என்ற சந்தேகம் வலுப் பெறுகிறது. வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?

சட்ட நடவடிக்கை
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியாவது, “கோட் சூட் போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் - ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என்று பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved