Also Watch
Read this
பண்ணையார்த்தனமும், ஆதிக்க மனப்பான்மையும் தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என்று, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி உள்ளார். கூட்டணிக் கட்சிகள் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதிக்கம் செலுத்தியதே தோல்விக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டை முன் வைத்தார். தவெக தான் உண்மையான அதிமுக என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சூளுரைத்தார்.
தவெகவில் சேர குவியும் பிற கட்சியினர்
சென்னை, பனையூரில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;
யார் மக்கள் முன்பு உறுதியாக நிற்கிறார்களோ, மக்கள் அவர்களை தலைவராக உருவாக்குவார்கள். இப்படித்தான் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கப்பட்டனர். இப்படித்தான் ஜோசப் விஜய்யும் உருவாக்கப்பட்டு உள்ளார். எனக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் அமைச்சராக இருந்தவர். இப்போது முதல்வர் விஜய் தலைமையிலும் அமைச்சராக உள்ளார். இந்த அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்.

எந்த ஊழலும் இல்லை
மதச்சார்பின்மை, சமூக நீதியை காக்கும் வகையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கூட்டணியை முதல்வர் விஜய் உருவாக்கினார். திமுக ஆட்சியில் முதல்வர் குடும்ப நிதி, அமைச்சர் நிதி, கட்சி நிதி, அதிகாரிகள் நிதி என ஊழல் இருக்கும். இன்று எந்த ஊழலும் இல்லை. இன்று முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் வரை ஊழல் இல்லை. இன்று சிஎம்டிஏவில் வீடு கட்ட ஒப்புதல் வாங்க பணம் கொடுக்க தேவையில்லை. பத்திரப் பதிவு, வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை என எந்த துறையிலும் ஊழல் இல்லை. தமிழகத்தில் ஊழலை ஒழித்த வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கி உள்ளார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், மீண்டும் பழையபடி அந்த குடும்பத்தின் ஊழல், கீழ்மட்டம் வரை தொடர்ந்திருக்கும்.
மக்களுக்கு எதிராக ஆட்சி, முயற்சி
சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, திமுகவும், அதிமுகவும் கூட்டணியை உருவாக்க முயற்சி நடந்தது. புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என கையெழுத்து பெற்று உள்ளனர். 47 பேரை வைத்துக் கொண்டு எந்த நம்பிக்கையில் முதல்வராக முடியும் என பழனிசாமி கையெழுத்து பெற்றார். இதற்கு எதிராக சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினர். அதன்பின்னர் தான் உதயநிதியை முதல்வராக்கி, பழனிசாமியை துணை முதல்வராக்கி, ஊழல் நிதியை பிரித்துக் கொள்ள முடிவெடுத்தனர். இதனை முதலில் எதிர்த்த கம்யூனிஸ்டுகளுக்கு கோடான கோடி நன்றி. இதனை எதிர்த்தே காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் எங்களை ஆதரித்தனர். மக்களின் தீர்ப்புக்கு எதிராக ஆட்சியமைக்க திமுக, அதிமுக, பாஜக சேர்ந்து ஒரு சூழ்ச்சியை செய்தது. இது உண்மையான எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களுக்கு அதிமுக மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது.

திமுக, அதிமுக மீது விமர்சனம்
ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணி குறித்து முடிவெடுக்க உரிமை உள்ளது. இதுபோன்ற பண்ணையார்தனம், ஆதிக்கம் தான் திமுகவின் தோல்விக்கு காரணம். பிறப்பால் முதல்வராக உருவானதால் தான், இத்தகைய எண்ணம் ஸ்டாலினுக்கு வருகிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்களை ஏன் வரவேற்கிறோம் என்றால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், பழனிசாமி எடுத்த முடிவுகள் தொண்டர்களுக்கு எதிராக இருந்தது. அதனால்தான் அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்தது.
தவெக தான் ஒரே நம்பிக்கை
அதிமுகவினர் எங்களிடம் வருவது குறித்து, எங்கள் கூட்டணி கட்சியினருக்கு நான் தொலைபேசியில் விளக்கம் அளித்தேன். எந்த எம்எல்ஏவையும் ஆஃபர் கொடுத்து நாங்கள் கூப்பிடவில்லை. எங்கள் தலைவர் அப்படிப்பட்டவர் இல்லை. முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் வருகிறார்கள். இந்த நம்பிக்கையில்தான் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, நேர்மையாக தேர்தலை சந்தித்து, வாழ்நாள் முழுவதும் தவெகவில் பயணிக்க அவர்கள் வருகின்றனர். அவர்களை வரவேற்பது எங்கள் கடமை. திமுக உடன் இணைவதாக பழனிசாமி எடுத்த முடிவின் காரணமாகவே அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். இன்று தவெக மட்டும் தான் ஒரே நம்பிக்கை என்று செங்கோட்டையனை போன்று பெரும்பாலான நிர்வாகிகள் எங்களுடன் இணைகின்றனர்.

அதிமுகவில் இருந்து 90% பேர்
அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் தவெகவில் இணைவதற்கான வேண்டுகோளை ஏற்கெனவே கொடுத்து விட்டனர். இனி ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்றுக் கட்சியினரை தவெகவில் இணைக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பணம் கொடுத்து மாற்றுக் கட்சியினரை தவெகவில் சேர்ப்பதாக திமுக தான் அவதூறு செய்கிறது.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved