news-tamil-logo

3/22/2026, 1:18:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா

MOTHER OF TRADE யாருக்கு ஜாக்பாட்

Posted on: Jan 29, 2026 06:49 AM

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று, இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் என்னென்ன பொருட்கள் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது? இரு நாடுகளுக்கும் என்னென்ன பயன்கள் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஒட்டுமொத்த வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்

இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் வரலாற்று சிறப்புமிக்க, தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. இந்த ஒப்பந்தம், ஒட்டுமொத்த வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என்று பரவலாக விவரிக்கப்படுகிறது. 213 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலகின் மிகப் பெரிய ஒப்பந்தம் இறுதி வடிவத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்திய சந்தைகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் 90 சதவீத பொருட்களுக்கு வரி இல்லா நிலை உருவாகும்.

ஒப்பந்தம் அமலுக்கு வந்தால்...
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்பான பென்ஸ்-மெர்சீடஸ், ஆடி, பி.எம்.டபுள்யூ லம்போர்கினி, போர்ஷே கார்கள் விலை குறையும் என சொல்லப்படுகிறது. இந்த கார்களுக்கான இறக்குமதி வரி 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. ஐரோப்பிய நிறுவன கார்களுக்கு தற்போது இருக்கும் 110% வரியை 40% ஆக இந்தியா குறைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரையிலான சிறிய ரக கார்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற நிலையில், இந்த ரக கார்கள் பெருமளவில் உள் நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகையால், இந்த சந்தைக்கு போட்டி இல்லாத வகையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரிச் சலுகைகள்
ஆலிவ் எண்ணெய், கிவி, பேரிக்காய், பழச்சாறு, ரொட்டி, பிஸ்கட், பாஸ்தா, சாக்லேட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்கள், செல்லப் பிராணிகளின் உணவு வகைகள், ஆட்டிறைச்சி உள்பட பிற இறைச்சி வகைகள் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு இந்தியா வரிச் சலுகை அளிக்கும். தற்போது, இந்தப் பொருட்கள் மீது இந்தியா 33 முதல் 150 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்களின் விலையும் குறையும். இந்த வகை
ஒயின்களுக்கு தற்போது 150% வரி விதிக்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின்படி, இந்த வரி 20 சதவீதமாக குறைக்கப்படும். இதனால், ஒயின்களின் விலை இந்தியாவில் கணிசமாக குறையும்.

கணிசமாக விலை குறையும்
ஐரோப்பிய யூனியனில் உற்பத்தி செய்யப்படும் புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்களுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகளின் விலை குறையும். அதேபோல, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளிலும் சந்தைகள் திறக்கப்படும். இது தவிர்த்து, ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விமான உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், தொழில்நுட்ப மின்னணு சாதனங்கள் ஆகியவற்றின் விலையும் கணிசமாக குறையும் என சொல்லப்படுகிறது.

மூலப் பொருட்களின் விலையும் குறையும்
மேலும், இரும்பு, எஃகு, ரசாயன பொருட்களுக்கான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு, எஃகு, ரசாயன பொருட்கள் ஆகியவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் என நம்பப்படுகிறது. இதனால், கட்டுமானங்களின் மூலப் பொருட்களின் விலையும் குறையும்.

ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் ஆதிக்கம்
முக்கியமாக, இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட பின்னலாடை நிறுவனங்கள் பெருமளவில் பயன் பெறும். ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதி செய்யும். திருப்பூரில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு 9 முதல் 12 சதவீதம் வரை விதிக்கப்பட்டு வந்த வரி நீக்கப்படும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகளுக்கு ஐரோப்பிய யூனியனில் வரி குறையும் என்பதால், பெருமளவில் இந்திய ஜவுளிகளை நுகர்வோர்கள் வாங்கக் கூடும். இதனால், ஏற்றுமதியாளர்களுக்கும் நன்மை கிடைக்கும்.

அமெரிக்காவின் முக்கியத்துவம் குறையும்
இந்தியா ஏற்கனவே பிரிட்டன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் அமெரிக்காவின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து வரி நெருக்கடி அளித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் மிகுந்த கவனம் பெறுகிறது.

Related Link
இந்தியாவிற்கே பேரிடி

இந்தியாவிற்கே பேரிடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 38 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved