Also Watch
Read this
சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனையால், மக்களவை முடங்கியது. மத்திய அரசு உடனடியாக விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு, முழக்கமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சியினர் போராட்டம்
சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை அடுத்து, மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில் அமளி
எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி, மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள், இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மத்திய அரசு பொய் கூறுகிறது
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான கே.சி.வேணுகோபால் கூறியதாவது; வர்த்தக பயன்பாட்டுக்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்க வேண்டாம் என்று எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. நிலைமை நாள்தோறும் மோசமாகிறது. மத்திய அரசு நாட்டு மக்களிடம் பொய்களைக் கூறி வருகிறது.
இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

முடங்கும் உணவகங்கள்
மத்திய கிழக்கு போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், உணவகங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்து இருந்தாலும், எரிவாயு இருப்பு குறைவாகவே இருப்பதாக தெரிய வருகிறது. இதனால், 5 ஸ்டார் விடுதிகள் முதல் சாலையோர டீக்கடை வரை அனைத்துக்கும் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பல்வேறு நகரங்களில் உணவகங்களை மூடத் தொடங்கி விட்டனர். அதிக அளவில் தனியார் வசிக்கும் பெங்களூரில் ஏற்கனவே ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved