Also Watch
Read this
Posted on: Oct 04, 2024 03:49 PM
By: Srini Vasan

கஷ்டப்பட்டு குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் தவிர, திருச்சியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப் பட்டும், மாவட்டத்தில் இன்னும் குடிநீர் பிரச்சினை என்பது தீராத தலைவலியாக உள்ளது .
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தை "தண்ணி இல்லா காடு " என்றுதான் பல திரைப்பட வசனங்களில் சொல்ல கேட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்பதற்கு உதாரணமாக தற்போது அங்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பெண்கள் தண்ணீரை தேடி அலைந்தும், ஆபத்தை உணராமல் பரபரப்பான சாலையை கடந்தும் செல்லும் காட்சிகள் தான் இவை..
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 51 ஊராட்சிகள் மத்திய அரசின் ஜல்- ஜீவன் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அதில் வெண்குளம் உள்ளிட்ட 159 குக்கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு தனித்தனி குடிநீர் இணைப்பு குழாய் வழங்க 33 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்தது. மத்திய அரசின் இந்த திட்டம் போக, மாநில அரசு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மேல்நிலை தொட்டிகள் கட்டியும், வீடுகளுக்கு குடிநீர் வழங்க குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களை திறந்தால் தண்ணீருக்கு பதில் காத்து மட்டும் வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் அந்த மக்கள்.
ஜல்- ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு பொருத்தப்பட்ட குடிநீர் குழாய்கள் தினுசு தினுசாய் ஆங்காங்கே காட்சி பொருளாக மட்டும் காட்சி தருகின்றன. சில இடங்களில் சிமெண்ட் தடுப்புகளில் பைப்புகள், சில இடங்களில் பிளாஸ்டிக் பைப்புகளில் பைப்புகள் இன்றும் சில இடங்களில் கருவேலம் மரகுச்சியை இணைப்பாக வைத்தும் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. பெயரளவுக்கு கூட முறையாக குழாய்கள் அமைக்காமல், பல லட்சம் ரூபாயை சுருட்டிய ஏப்பம் விட்ட ஒப்பந்ததாரர்களின் செயலை கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளும், காட்சிக்கு ஒரு படம் எடுத்துக் கொண்டதோடு சரி.. தண்ணீர் வருகிறதா இல்லையா என சிறு அக்கறை கூட காட்டவில்லை என தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர் .
வறட்சிக்கும் குடிநீர் பஞ்சத்திற்கும் பெயர்போன ராமநாதபுரத்தில் மக்கள் தண்ணீருக்காக படும் அவதியை சொல்லிமாளாது என்பதற்கு இந்த காட்சிகளேசாட்சி.. தினசரி தங்க வேட்டை தேடுவதை போல தண்ணீர் தேடுவதையே தங்களின் பிரதான வேலையாக இருப்பதாக கூறும் பெண்கள் தண்ணீரை தேடி ஓட வேண்டிய கட்டாயத்தால் வேலைக்கு கூட செல்ல முடிவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
சீர் வண்டியில் நான்கைந்து குடங்களை வைத்து தினமும் சில கிலோ மீட்டர் அதனை தள்ளிக்கொண்டு ஆள் அரவமற்ற சீமை கருவேல மரங்கள் நிறைந்த பகுதிக்கும், எப்போதும் பரபரப்பாக கனரக வாகனங்கள் செல்லும் சாலையிலும் உயிரை பணயம் வைத்து தண்ணீர் பிடித்து வர வேண்டியதாக கூறும் பெண்கள், சிறு சிறு குழிகளை சிறுக சிறுக ஊறும் தண்ணீரை ஆப்பக்கரண்டியில் அள்ளி சேகரிக்க கால் கடுக்க காத்து கிடப்பதாக கூறுகின்றனர்.
மக்களின் தீராத தாகத்தை தீர்ப்பதற்காக அரசால் புதிது புதிதாக திட்டங்கள் வகுக்கப்பட்டும் அதிகாரிகளின் அலட்சியம், ஒப்பந்ததாரர்களின் லாபவெறி காரணமாக அந்த திட்டங்கள் அப்படியே முடக்கப்பட்டு காட்சி பொருளாக மாறிவிட்டது என்பதற்கு சாட்சியாக இருப்பது ராமநாதபுரத்தில் செயல்படுத்தப்பட்ட ஜல்ஜீவன் திட்டம்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved