Also Watch
Read this
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதலமைச்சர் விஜய் நேரம் கேட்டதாகக் கூறுவது தவறு என்று, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் பேச்சுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
நேரம் கேட்கவில்லை
இதுதொடர்பாக, கே.பி.முனுசாமி கூறியதாவது;
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டதாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், இபிஎஸ் அல்லது அவரது அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளவில்லை என்றும், மாறாக வேறு அதிமுக தலைவர்களிடம் கேட்டதாகவும் இப்போது வேண்டாமென அவர்கள் சொன்னதாக கூறியது, முற்றிலும் தவறானது. எந்த சூழலிலும் விஜய் அலுவலகத்திலிருந்து சந்திக்க நேரம் கேட்கவில்லை.

இந்த வெற்றி...
தமிழக முதல்வர் ரீல்ஸ் விட்டு, இன்ஸ்டாகிராமில் சினிமா போல உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். மாயத் தோற்றத்தை உருவாக்கி, இளைஞர்களிடம் தன் பெற்றோரையும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்தியதால் வெற்றி பெற்றுள்ளார். விஜய் வெற்றி இந்த சமூகத்திற்கு செய்த தியாகத்திற்கோ, உழைப்பிற்கோ கிடைத்ததல்ல, குறிப்பிட்ட சதவிகிதம் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்து உள்ளனர்.

யாரை சந்தித்திருக்க வேண்டும்?
எந்தக் கட்சியும் தீர்ந்து போகாது, கம்யூனிஸ்ட் ஆட்சிக்கே வர முடியாது
என்றாலும் கொள்கையை முன்நிறுத்தி இருப்பார்கள். விஜய் பார்த்து படிப்பவர், அவரிடம் சரக்கு இல்லை. 31 ஆண்டுகால ஆட்சியில் இருந்த இயக்கம், தேசிய கட்சிகள் உடன் இணைந்து போட்டியிட்ட அதிமுக தனித்துவத்தை எப்படி இழக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிக்காதவர் பெரும்பான்மை இல்லை என்றால் விஜய் யாரை சந்தித்திருக்க வேண்டும்?

திருமாவளவனை விமர்சிப்பதா?
விசிக தலைவர் திருமாவளவன், கீழே இருந்து வளர்ந்த தலைவர், சமூகத்தின் போராளி என்று கூட சொல்லலாம். அவரின் மனம் எவ்வளவு புண் பட்டிருக்கும். திமுக தலைவரை மனதார ஏற்று 11 ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணியில் இருந்தார். திமுக தலைவர்களை அன்போடு, முக மலர்ச்சியோடு சந்தித்திருப்பார். அவரை, திமுகவினர் இப்படி பேசக்கூடாது என திமுக தலைவர் தெரிவிக்க வேண்டும்.

ஒரு விநாடி மாறினால்...
விஜய் சினிமா பாணியில் பேசுவதால் அவரின் முன்னாடி உள்ளவர்கள் கை தட்டலாம், முகம் சுழிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை உணர வேண்டும், உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் நீங்கள் மாநில முதல்வர். தவெகவிற்கு கட்சி அமைப்பே இல்லை. அதிமுகவுக்கு குக்கிராமங்களில் கிளை உள்ளது.
உங்களுக்கு எங்கு இருக்கிறது? மனிதனுக்கு கொள்கை, சிந்தனை உள்ளது. உங்களிடம் இருப்பவர் எத்தனை நாள் இருப்பார் என தெரியாது. ஒரு விநாடி மாறினால் என்ன நடக்கும், முதல்வர் பாசத்தோடு இருக்க வேண்டும்.

அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடுமா?
இடைத்தேர்தல் வரட்டும், எப்படி இருக்கும் என பாருங்கள். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், காப்பாற்றியவர் ஜெயலலிதா. அவர் வழியில் இபிஎஸ் உழைக்கிறார். போதை பொருட்களை ஒழிப்பேன், சிங்கப்பெண் என்றால் எத்தனை அலுவலகம் திறந்தீர்கள்? நிதி ஒதுக்கியது எவ்வளவு? தனி திறனை எப்போது கற்பிப்பீர்கள்? கஞ்சா விற்றவனை காட்டிக் கொடுத்தால் கொலை செய்கிறார்கள். கடுமையான உத்தரவு போட்டு நடவடிக்கை எடுத்தால், இவற்றை தடுக்க முடியும்.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved