Also Watch
Read this
By: Manigandan Raja
ஈரானைத் தாக்க, இந்திய கடற்படைத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி கூறியதற்கு மறுப்பு. அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல் என இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா?
ஈரான் கப்பல் மீது, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதலை நடத்தி உள்ளது. இதில், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

வெளியான தகவல்
ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்கக் கடற்படை இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்ததாக வெளியான தகவல்களை, இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகர், தீவிர வலதுசாரி ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம்
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறி இருப்பதாவது:
அமெரிக்காவை சேர்ந்த OAN தொலைக்காட்சியில், அமெரிக்க கடற்படை இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் கூற்று, போலியானவை மற்றும் தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாங்கள், உங்களை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவால் நடத்தப்பட்ட ராணுவ பயிற்சியில் இருந்து வெளியேறிய ஒரு ஈரானிய போர்க்கப்பல் மீது இலங்கைக் கடற்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் குறித்த ஆய்வுக்கு மத்தியில், இந்தியாவின் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ காட்சி வெளியீடு
ஈரான் போர்க் கப்பலான IRIS Dena மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க கூறியிருந்த நிலையில், அது தொடர்பாக வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஈரான் போர்க்கப்பல் சென்று கொண்டிருக்கும்போது, கடலுக்கு அடியில் இருந்து ஏவுகணை வந்து தாக்குவதையும், இதில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்ததையும் காண முடிகிறது. இது ஒருபுறம் இருக்க, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட ஈரான் ராணுவ வீரர்களின் உடல்கள் ஒரு கண்டெய்னர் வாகனத்தில் கொண்டு வந்து பிணவறையில் இறக்கப்படும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

மேலும், இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஒரு கட்டடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டு தாக்கியதில் அங்குள்ள கட்டடம் ஒன்று வெடித்துச் சிதறுவதையும், இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடும் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன.
எனினும், தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் பெய்ரூட்டில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதிர்ச்சி தரும் உயிரிழப்புகள்
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில், இதுவரை ஆயிரத்து 45 பேர் கொல்லப்பட்டதாக, ஈரான் அரசின் தியாகிகள் மற்றும் முன்னாள் வீரர்களின் விவகாரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தகவல் இதுவரை அடையாளம் காணப்பட்டு இறுதிச்சடங்கிற்கு தயாரான உடல்களின் எண்ணிக்கை என்றும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved