தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினருக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில், மீனவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திர மயமாக்கப்பட்ட மீன் பிடி படகுகளையும் சிறை பிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர் அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மீனவர்களின் வாழ்க்கை, அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுபோன்று தொடர்ச்சியாக, மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள், தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கைது நடவடிக்கையின் போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சுட்டிக் காட்டியுள்ளார்.எனவே, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் | CM Stalin | S Jaishankar | Fisherman Issue