கரூர் சம்பவத்தை கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றனர்.தமிழக சட்டசபையின் இரண்டாவது நாள் நிகழ்வு, இன்று அக்டோபர் 15ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு கைப்பட்டை அணிந்து, பங்கேற்றனர். அப்போது, சபாநாயகர் அப்பாவு, “அனைவருக்கும் பிபி கூடிவிட்டதாக நினைத்தேன்” என்றார். உடனே, அமைச்சர் ரகுபதி, “சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு அடையாளம் கொடுப்பார்கள். அதேபோல இன்றைக்கு தனி அடையாளத்தோடு நம்முடைய உறுப்பினர்கள் சிலர் இங்கே வந்து இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் பற்றி தவறாக சொல்லவில்லை" என்று கூறினார். இந்நிலையில், சபை தொடங்கியது. கேள்வி நேரத்தின்போது ”அமைச்சர் துரைமுருகன் அமர்ந்தே பதில் சொல்லலாம். நீங்கள் நன்றாக இருக்கீர்கள் என்பது எனக்கு தெரியும்” என சபாநாயகர் அப்பாவு கூறினார்.உடனே, ”என்னை வயதானவராக காண்பிக்க வேண்டாம், எனக்கு இன்னும் வயதாகி விடவில்லை” என அமைச்சர் துரைமுருகன் கூறியது, சிரிப்பலையை ஏற்படுத்தியது.உடனே அப்பாவு, ''நாங்கள் அதை சொல்லவில்லை. இளைஞர் ஆக தான் பார்க்கிறோம்'', என்று கூறினார். இவ்வாறு கேள்வி பதில் நேரம் தொடர்ந்தது.