Also Watch
Read this
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர். அதிமுகவில் தலைமையை மாற்ற சிலர் போர்க்கொடி தூக்கிய நிலையில், 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்தனர்.
அதிமுக பலம் குறைந்தது
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. அரசியல் களத்தில் புதிதாக நுழைந்த தவெக 108 இடங்களிலும், ஆளுங்கட்சியாக இருந்த திமுக கூட்டணியாக சேர்ந்து 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

அதிமுகவில் குழப்பம்
இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தையே அதிமுகவால் பிடிக்க முடிந்தது. இதனால் உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடிக்க துவங்கியது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் சாய காத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்காலிக சபாநாயகரிடம் மனு
எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. 47 அதிமுக எம்எல்ஏக்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்துக்கு இரு அணிகளாக பிரிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஓர் அணியாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியாகவும் வந்தது, கவனிக்க வைத்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved