Also Watch
Read this
அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ராஜ்ஜியம் செய்த திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, அரசியல் கட்சி தொடங்கி 27 மாதங்களிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை தன் வசமாக்கி சாதனை படைத்திருக்கிறார் ஜோசப் விஜய். நேரு விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்ற கையோடு, 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு அதிரடி படை, போதைப் பொருளை ஒழிக்க சிறப்பு படை உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு முதலமைச்சர் விஜய் அதிரடி காட்டினார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழா
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழா. மாறி மாறி திமுக, அதிமுக வென்று வந்த மண்ணில், முதல் தேர்தலிலேயே இமாலய சாதனை படைத்தது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆண்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும், ஆட்சி அரியணை கை தொடும் தூரத்தில் இருந்தபோது எக்கச்சக்க தடைகள் வந்தன.

பெரும்பான்மை சிக்கல்
தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை முதல் ஆப்ஷனாக வைத்து காய் நகர்த்திய தவெக, மூன்று நாள் இழுபறிக்கு பின்னர் பெரும்பான்மையை உறுதி செய்தது. இதனையடுத்து, நீண்ட இழுபறிக்கு பிறகு பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வந்தது. பதவியேற்பு விழாவுக்காக காலை 8.30 மணிக்கே நீலாங்கரை வீட்டில் இருந்து கான்வாய் பாதுகாப்பு புடை சூழ புறப்பட்ட விஜய்யை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ராகுல்காந்தி பங்கேற்பு
குறித்த நேரத்துக்கு முன்னதாகவே விழா அரங்கிற்கு வந்து ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதனையடுத்து, திட்டமிட்டபடி காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. முதலில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். வழக்கமான மேடை பேச்சு பாணியிலேயே அதிரடியாக, எனெர்ஜிட்டிக்காக முதலமைச்சராக பதவியேற்றார் விஜய். ஜோசப் விஜய்க்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் அர்லேக்கர் செய்து வைத்தார்.

அதிர்ந்த அரங்கம்
விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் போது, ஒட்டு மொத்த அரங்கமே ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. மேடையில் விஜய் பதவியேற்கும் போது, கீழே அமர்ந்திருந்த விஜய்யின் தாய், தந்தை உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்த கண்ணீர் விட்டு பெருமையை வெளிப்படுத்தினர். பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் இருந்து அவசர அவசரமாக வருகை தந்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மேடையில் விஜய்க்கு அருகிலேயே அமர்ந்திருந்து வாழ்த்து தெரிவித்தார். விழா முடிந்ததும் ராகுல் காந்தியும், விஜய்யும் இணைந்த கைகள் போல கைகளை உயர்த்தி காட்டி நின்றனர்.

அமைச்சர்கள் பதவி ஏற்பு
முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து, அவரின் தளபதிகளாக பார்க்கப்படும் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், பிரபு உள்ளிட்டோர் ஒன்றன் பின் ஒன்றாக பதவியேற்றுக் கொண்டனர். இதில், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பெண் அமைச்சராக சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தோற்கடித்த கீர்த்தனா பதவியேற்றார்.

மேடையிலேயே கையெழுத்து
பதவியேற்பு விழா முடிந்ததும் ஆளுநர் அர்லேக்கர் புறப்பட்டு விட்ட நிலையில், அடுத்த சிறிது நேரத்திலேயே நேரு ஸ்டேடியம் தலைமைச் செயலகமாக மாறியது. மக்கள் முன்பாகவே நேரு உள் விளையாட்டு அரங்கத்திலேயே வைத்து மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய். முதன்முதலில் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய். அதாவது, 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரம் கணக்கிடப்படும் முறையில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை
பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையை உருவாக்குவது, போதைப் பொருள் குற்றங்களை தடுக்க அனைத்து மாநகர, மாவட்டங்களில் போதைப் பொருள் தடுப்பு படையை உருவாக்குவது உள்ளிட்ட திட்டங்களிலும் கையெழுத்து போட்டார். சமீப காலமாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வந்த நிலையில், பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு பிரிவை உருவாக்கும் முதலமைச்சர் விஜய்யின் கையெழுத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் நாற்காலியில்...
முதலமைச்சராக பதவியேற்ற விஜய், நேரடியாக தலைமைச் செயலகம் சென்றார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த விஜய், தற்காலிக சபாநாயகர் நியமனம் செய்யப்படும் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து போட்டார். அந்த வகையில் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ., கருப்பையாவை நியமனம் செய்தார் முதலமைச்சர் விஜய். அப்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தும் வந்தே மாதரமும்
விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில், அதற்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மூன்றாவதாக தான் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது சர்ச்சையானது. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது சர்ச்சையான நிலையில், ஆளுநர் மாளிகை நடத்தும் நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் என மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதோடு, கடந்த முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போதும் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பின்னர் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

திரிஷா உள்பட திரையுலத்தினர்...
திரைத்துறையில் இருந்து இன்னொருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கும் நிலையில், பதவியேற்பு விழாவில் ஜனநாயகன் பட தயாரிப்பாளர், நடிகை திரிஷா, விஜய்யின் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved