Also Watch
Read this
Posted on: Mar 14, 2026 10:19 AM
தமிழகம் முழுவதும் தெரிந்த முகமாகி இருக்கும் இரண்டு சிறுவர்களை விளம்பர வெறிக்குப் பயன்படுத்துவதா? என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சி, நிர்வாகத்தில் கவனம்
இதுதொடர்பாக, பாஜக முன்னாள் தலைவர்
வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டதற்கு காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல், ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்
நீங்கள் அந்த இரண்டு சிறுவர்களிடமும், ரீல்ஸ் போடுவதோடு மட்டுமின்றி, கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன அறிவுரை, இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை. நீங்கள் ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில், எப்போது கவனம் செலுத்தப் போகிறீர்கள்?
அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள்
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், கட்டிடங்கள் இல்லாமல், குடிநீர் வசதி இல்லாமல், கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றன. பல்லி விழுந்த உணவு உண்டு, 43 பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு தரமற்ற காலை உணவும், அழுகிய முட்டையுடன் மதிய உணவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசு. இவற்றை எல்லாம் சரி செய்வதை விட்டுவிட்டு, கல்வி நேரம் போக, தங்கள் கடின உழைப்பினால், இன்று தமிழகம் முழுவதும் தெரிந்த முகமாகியிருக்கும் இரண்டு சிறுவர்களையும், உங்கள் விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே, வெட்கமாக இல்லையா?
மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்திக் கொடுங்கள். பள்ளிகள் வரை வந்து விட்ட கஞ்சா உட்பட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துங்கள். உங்கள் விளம்பர நாடக அறிவுரை இல்லாமலேயே அவர்கள் படிப்பார்கள்.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved