Also Watch
Read this
Posted on: Nov 28, 2024 09:58 AM
By: Srini Vasan

காதல்...கல்யாணம் என தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில், விவாகரத்து எனும் புயல் காற்று வீசி ஓய்ந்து முடிந்தது....
காதல் கொண்டேன் படம் பார்ப்பதற்காக சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்றபோது தனுஷை முதல்முறையாக சந்தித்தார் ஐஸ்வர்யா. படம் பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை பாராட்டி பூங்கொத்து அனுப்பிய ஐஸ்வர்யா, தானும், தனுஷும் சந்திக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என தெரிவித்தார். அதுவே..இருவரையும் வாழ்வில் இணைத்த முதல் தருணம்...
ஐஸ்வர்யா அனுப்பிய பூங்கொத்துக்காக அவருக்கு போன் செய்து நன்றி கூறினார் தனுஷ். அதன் பிறகு இருவரும் நண்பர்களாகினர். முதலில் பூங்கொத்து கொடுத்த ஐஸ்வர்யா, பிறகு தனுஷிடம் தனது மனதையே பறிகொடுத்துவிட்டார்...
இவர்களது காதலுக்கு ரஜினி முதலில் சிவப்புக் கொடி காட்டியதாக கூறப்பட்டது. ஆனால், ஐஸ்வர்யா பிடிவாதமாக இருந்ததால், ரஜினி மனம் மாறி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
தனுஷ் - ஐஸ்வர்யாவின் காதலுக்கு சாட்சியாக யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.. திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக பங்கேற்றபோது, மனைவி ஐஸ்வர்யாவுக்காக ரொமான்டிக் பாடலை பாடி அசத்தினார் தனுஷ்...
திருமண பந்தத்தில் மட்டுமின்றி, கேரியரிலும் இருவரும் இணைந்தே வளர்ந்தனர்.. அதற்கு உதாரணம், ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படம்..
இப்படி காதலால் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென இருள் சூழ்ந்தது...தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, சட்ட ரீதியாக விவாகரத்து கோரி இருவரும் நீதிமன்றத்தை நாடினர்.
இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தனுஷ் நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும், அப்போது ரஜினி வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால், தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ரசிகர்களின் நம்பிக்கையை பலப்படுத்தும் விதமாக, விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு இருவருமே தொடர்ந்து 3 முறை ஆஜாராகவில்லை. இதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் திடீர் டுவிஸ்ட் ஆகிவிட்டது..
விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை குடும்ப நல நீதிமன்றம், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார். இதன் மூலம் அவர்களது 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது...
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்.. மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.. பாடல் வரிகள் இடம்பெற வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved