Also Watch
Read this
By: Manigandan Raja
திமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் தேசியச் செயலாளராக இருப்பவரும், திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவருமான கிறிஸ்டோபர் திலக் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்.க்கு ஒரு சீட்
தமிழகத்தில், ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கான இடங்கள் காலியாகிறது. இதில், நான்கு இடங்கள் திமுகவுக்கும், இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் நிலை உள்ளது. திமுக தனது நான்கு இடங்களில் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொரு இடத்தை தேமுதிகவுக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் செய்துள்ளது. மீதமுள்ள இரு இடங்களில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டியிடுகின்றனர்.

இன்றே கடைசி
மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று மார்ச் 5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் இருந்து திமுக ஒதுக்கிய ஒரு இடத்தில், கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்தவர்
திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். ராகுல் காந்தியின் நம்பிக்கையை பெற்றுள்ள இவர், இளம் தலைமுறை காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர். மூத்த தலைவர்களான சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் ராஜ்யசபா இடத்தை பெற தீவிரமாக முயற்சித்த நிலையில், இளம் தலைமுறையை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்குக்கு, ராகுல்காந்தி வாய்ப்பு அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved