மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வரும் 8ஆம் தேதி வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது. மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் வரும் 12ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக வைகை அணையிலிருந்து நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 215 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ள நிலையில் ஆரம்பத்தில் விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு, பின் படிப்படியாக குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.