Also Watch
Read this
வண்டி வண்டியாக திமுகவினர் வைத்திருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களது காதுகளில் விசிலை ஊதி அனுப்ப வேண்டும் என்றும், தவெகவுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்குமாறும் பெரம்பூர் தொகுதியில் அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விஜய் வேட்பு மனு தாக்கல்
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. முதல்நாளிலேயே, தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகின்றனர். இன்று காலை தவெக தலைவர் விஜய், வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, ஊர்வலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நம் தாய் வீட்டிலிருந்து...
தவெக தலைவர் விஜய் பேசியதாவது;
நம்மை பிடித்தவர்கள் உள்ள இடத்தில் இருந்து, பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழகமே எனக்குப் பிடித்த இடம் தான். அதனால், தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரத்தைத் தொடங்கலாம். ஆனால், நம் வீட்டின் வாசலில் இருந்து, நம் தாய் வீட்டில் இருந்து தொடங்குவது போல், பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தேன், அதனால், இங்கு பெரம்பூரில் இருந்து தொடங்குகிறேன். வட சென்னையின் அடையாளங்களான லூர்து அன்னை தேவாலயம், பிரசித்தி பெற்ற கோயில், பல மசூதிகள் இருக்கும் இந்த் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். ‘உன்னை மதிக்கும் உழைக்கும் மக்கள் உள்ள தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கு’ என்று, எனது மனம் சொன்னதால் இங்கு இருந்தே தொடங்குகிறேன்.

வாக்காளர்களிடம் விஜய் சரமாரி கேள்வி
என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் மக்களே, போதைப் பொருள் புழக்கம் மிகுந்த, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, ஊழல் மிகுந்த தமிழகத்துக்கு ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சி தான் காரணம். இப்படிப்பட்ட ஆட்சி நடத்திய ஸ்டாலின், இந்த தேர்தலோடு விடைபெறப் போகிறார்.

நம் வீட்டுப் பெண் பிள்ளைகள், இரவில் கழிவறை செல்லக் கூட முடியவில்லை, மூதாட்டியைக் கூட விட்டுவைப்பதில்லை. டீக்கடையில் டீ குடிக்கச் சென்றால் கூட போதை ஆசாமிகள் வெட்டு, குத்துக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? பொது மக்கள் பாதுகாப்பு மீது அக்கறையில்லை. தன் குடும்பத்தின் சொத்தைப் பெருக்குவதிலேயே தான் அக்கறை.

எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள்
நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்பில் நடந்துள்ள ஊழல், இளைஞர்கள் மீதான அநீதி. மக்களுக்குப் பாதுகாப்பு தர இயலாத, மக்கள் மீது அக்கறையில்லாத இந்த திமுக ஆட்சியைத் தூக்கி எறிவோம். அதனால், கொள்ளையடித்த பணத்தில் இருந்து அவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அதை, வாங்கிக் கொண்டு பதிலுக்கு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள். உங்கள் மகன், அண்ணன், தம்பி, பிள்ளை என்று நினைத்து, எனக்கு வாக்களியுங்கள். எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள், வாய்ப்பு கொடுங்கள்.

இளைஞர்களே மறந்து விடாதீர்கள்...
ஏப்ரல் 23ஆம் தேதியன்று மறவாமல் வாக்களியுங்கள். Gen Z இளைஞர்களே வாக்களிக்க தவறி விடாதீர்கள். தேர்தல் நாளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு எதிரான பொத்தானை அழுத்தத் தவறாதீர்கள். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும்.
இவ்வாறு பேசி, விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved