Also Watch
Read this
By: Web Team

சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்கு திருட்டு’ மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் ஆகிய நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
தீர்மானம் 1:
தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல் தான் என்ற நிலையில், அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறு இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
பீகார் மாநில சிறப்பு தீவிர திருத்தத்தினை எதிர்த்து திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே “Mass deletion” இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும், 65 லட்சம் வாக்காளர்களை, தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
இதனை எதிர்த்து, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களைத் தடுத்து நிறுத்தியதுடன், எப்ஐஆர் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு ஆணவப் போக்கை கடைப்பிடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
திமுக வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.திமுகவின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 17.7.2025 அன்றே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து, மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதை இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்கிறது.
சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3:
இந்திய தேர்தல் களத்தில் அசாதாரண மற்றும் ஆபத்தான சூழல் உருவாகி வரும் நிலையில், "ஓரணியில் தமிழ்நாடு" என்ற இயக்கம் - மக்கள் இயக்கமாக மாறி, இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக மாறியிருப்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மன மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறது.
புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் எப்போதும் திமுகவே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல, மதவெறி சக்திகளுக்கும், அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே ’மார்க்கெட்’ இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த கட்சியினர் அனைவருக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved