Also Watch
Read this
தமிழக பாஜகவே பரிந்துரைக்கவில்லை என்றால் வேட்பாளர் பட்டியலில் எப்படி பெயர் இருக்கும்? என்று தேர்தலில் சீட் வழங்கப்படாதது குறித்து அண்ணாமலை விரக்தி தெரிவித்து உள்ளார்.
பிரதமர் உடன் ஆலோசனை
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை கூறியதாவது;
புதுச்சேரி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பிரதமர் மோடி, கொச்சின் செல்வதற்கு முன்பாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இது ஒரு வழக்கமான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டமே தவிர, இதில் சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை.
போட்டியிட விரும்பவில்லை
சமூக வலை தளங்களிலும் ஊடகங்களிலும் நான் போட்டியிடுவது குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், உண்மையில் நான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இதை நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டேன். பி.எல்.சந்தோஷ், நிதின் நவீன் மற்றும் பி.எஸ்.கோயல் போன்ற மேலிடத் தலைவர்களிடம் எனது விருப்பத்தை ஒரு வாரத்திற்கு முன்பே தெளிவு படுத்திவிட்டேன்.

தீவிர பிரச்சாரம்
நான் ஒரு தொகுதியில் மட்டும் நின்று போட்டியிடுவதை விட, தமிழகம் முழுவதும் உள்ள 27 பா.ஜ.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரச்சாரம் செய்வதையே கடமையாகக் கருதுகிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, மற்ற வேட்பாளர்களுக்காக முழுமையாகப் பிரசாரம் செய்ய முடியவில்லையே என்ற ஒரு மனக்குறை எனக்கு இருந்தது. அதை இம்முறை சரிசெய்ய விரும்புகிறேன். தொண்டர்களின் ஏமாற்றத்தைப் புரிந்து கொள்கிறேன்.

முழு கவனமும் பிரச்சாரத்தில்...
எல்லாப் போர்களையும் ஒரே நேரத்தில் தொடுக்க முடியாது. 2026 தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க.வின் தவறுகளை மக்கள் முன் கொண்டு செல்வதே எனது தற்போதைய பணி. ஏப்ரல் 21ஆம் தேதி வரை முழு கவனமும் பிரச்சாரத்தில் மட்டுமே இருக்கும். அதன் பிறகு மற்ற விஷயங்களைப் பேசலாம்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved