Also Watch
Read this
By: Manigandan Raja

தங்க நகைகள் தீக்கிரை :
தங்க நகைகள் தீக்கிரை மதுரை மாவட்டம் மேலூர் அருகே வேப்படைப்பு என்ற கட்டையம்பட்டியில் அடுத்தடுத்த மூன்று ஓட்டு வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் தங்க நகைகள், பணம் மற்றும்
முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேப்படப்பு என்ற கட்டையம்பட்டி, முத்தரையர் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரணன் தனது மனைவி சித்ராவுடன் குழந்தையை திருவாதவூர் அரசு பள்ளியில்
சேர்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார்.
அப்போது வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்த நிலையில், வீரணன் வீட்டில் திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்டு குழந்தைகள் அலறியபடி வெளியே ஓடியுள்ளனர்.
இதனையடுத்து குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பார்ப்பதற்குள் தீ வேகமாக பரவி, அடுத்தடுத்திருந்த மகாலிங்கம் மற்றும் முருகேசன் ஆகியோரது வீடுகளிலும் பரவியது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள், ரூ.20 இலட்சம் பணம், குழந்தைகளின் கல்வி ஆவணங்கள் உள்ளிட்ட
முக்கிய பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
மேலும், வீடுகளையும் உடமைகளையும் இழந்த மூன்று குடும்பத்தினரும் குழந்தைகளுடன் கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved