Also Watch
Read this
மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்விதத்திலும் மீறக்கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.
விவசாயிகள் கவலை
இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் விஜய் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்துக்கான 'பூமி பூஜை' நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கனிவான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கர்நாடக மாநில துணை முதல்வர், இது தொடர்பாக பொது வெளியில் தெரிவித்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்துக்காக காவிரி ஆற்றையே நம்பி இருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட சட்ட போராட்டம்
காவிரி நதிநீர் பிரச்சினை, மிகவும் முக்கியமான ஒன்று. இப்பிரச்சினைக்கு சுமார் 30 ஆண்டுக்கு மேல் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னரே தீர்வு காணப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே. 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேகதாது திட்டம், காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
நீர்வரத்தை தடுக்கும் முயற்சி
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் திருத்தப்பட்ட இறுதி தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்துக்கான மூன்று கூறுகளில் ஒன்றான 'கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து' உருவாகும் நீர் வரத்தை தடுப்பதற்கு, கர்நாடக மாநிலம் முயன்று வருவதாகத் தமிழ்நாடு உறுதியாகக் கருதுகிறது. கர்நாடகா - தமிழ்நாடு எல்லையின் மிக அருகிலேயே, 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு புதிய மேகதாது திட்டத்தை முன்மொழிவதன் மூலம் கர்நாடக மாநிலம் இம்முயற்சியை மேற்கொள்வதாக தமிழ்நாடு கருதுகிறது.

கோரிக்கையை திருப்பி அனுப்பியது
இதுதொடர்பாக, கர்நாடக மாநிலம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு வரையறைகள் பெற முயன்றபோது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவானது, 19.07.2019 அன்று நடைபெற்ற தனது கூட்டத்தில், இதில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல் உள்ளதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து, அக்கோரிக்கையைத் திருப்பி அனுப்பியது என்பதை கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பரிசீலிப்பது வியப்பளிக்கிறது
ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையமும் தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்காமலேயே, கர்நாடகாவின் மேகதாது திட்ட முன்மொழிவை ஏற்றுப் பரிசீலித்து வருவது வியப்பளிக்கிறது. இந்த திட்ட அறிக்கையானது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருப்பதால், திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் ஆகியவற்றில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அறிவுறுத்துங்கள்
படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வகையிலும் மீறக் கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved