Also Watch
Read this
By: Manigandan Raja

நாதகவினர் ஆர்ப்பாட்டம் :
மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட நாடார் தெருவில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் ஒதுக்கி வைத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவலின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் மத்திய தொகுதி வேட்பாளர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் சமுதாய கூட வாசலில் முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுரையில் உள்ள அனைத்து சமுதாயக்கூடங்களும் தேர்தலின் காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ளது எனவே மீண்டும் திறக்க முடியாது என கூறினர்.
இதையடுத்து மத்திய தொகுதி வேட்பாளர் அப்துல் ஹக்கீம், வேட்பாளராக எனக்கு சந்தேகம் இருக்கிறது ஒருமுறை திறந்து காட்டுங்கள் உள்ளே நிச்சயமாக பரிசு பொருட்கள் இருக்கிறது என்றார்.
அப்படி சந்தேகம் இருக்கிறது என்றால் மாநகராட்சியிடம் மனு கொடுத்து முறையாக திறந்து கொள்ளுங்கள் என காவல்துறையினர் கூறியதை அடுத்து, வேட்பாளர் சார்பில் வழக்கறிஞர் மதுரை மாநகராட்சிக்கு சென்று மனு கொடுத்தனர்.
அதன் பேரில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கதவை திறக்க முற்பட்டார். கதவை திறக்கும் போது மாநகராட்சி அதிகாரிகள் வைத்த சீல் துணி பிரிக்கப்பட்டது.
அந்த துணியில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இருந்ததை கண்டு நாம் தமிழர் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அடுத்ததாக பிரிக்கப்பட்ட சீல் துணியிலும் திமுக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி அதிகாரிகள் வைக்கப்பட்ட சீல் துணிக்கும் உதயநிதி ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்ட துணிக்கும் என்ன சம்பந்தம் என நாம் தமிழர் கட்சியினர் அப்போதே கேள்வி எழுப்பினர்.
சமுதாய கூடத்தின் கதவு திறக்கப்பட்ட பின்பு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தனித்தனியாக 200 இருக்கைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் பெரும்பாலான இருக்கைகள் புதியதாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சியினர் சார்பில் குறிப்பிடப்பட்டது.
இதே இருக்கைகள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய தொகுதி மக்களுக்கு மக்களுக்கு அளித்துள்ளார். அந்த இருக்கைகள் தான் இங்கே உள்ளது என நாம் தமிழர் கட்சியின் மத்திய தொகுதி வேட்பாளர் அப்துல் ஹக்கீம் குற்றம் சாட்டினார்.
இந்த இருக்கைகள் சமுதாய கூடத்திற்கு சொந்தமானது என காவல்துறையினர் கூறினர், ஆனால் அந்த இடத்தில் அதிகபட்சமாக 100 இருக்கைகள் கூட போட முடியாது, இந்த இடத்திற்கு எதற்கு 400 இருக்கைகள் என நாம் தமிழர் கட்சியினர் கேள்வி எழுப்பி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இந்த அனைத்து இருக்கைகளும் பறிமுதல் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியினை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved