Also Watch
Read this
Posted on: Jan 26, 2026 09:49 AM
By: Manigandan Raja
தமிழகத்தில் திமுக அரசின் சி.எம்.சி. ஆட்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய விளக்கம் கொடுத்து பதிலடி தந்துள்ளார். அதோடு, அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்களை பார்த்திருப்போம், ஆனால் முரட்டு அடிமையை பார்த்ததுண்டா? என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு காட்டமாக விமர்சித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல்
மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சியாக, ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் திருவொற்றியூரில், திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணைமுதல்வர் உதயநிதி பேசியதாவது:
அரியானா, பீகார், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தாய் மொழிகளை, இந்தி விழுங்கிவிட்டது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை என்று இந்தியை திணிக்கும் முயற்சியாக, குலக்கல்வி திட்டத்தையும், சம்ஸ்கிருதத்தையும் புகுத்த பார்க்கின்றனர். எனவே, புதிய கல்விக்கொள்கையை ஏற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார். மொழி உரிமை என்று வரும்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது. இதனால் மத்திய பாஜக அரசுக்கு தமிழகத்தையும், முதல்வரையும் பார்த்தால் கோபம் வருகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக, டபுள் டிஜிட் வளர்ச்சியை பதிவு செய்த தமிழகத்துக்கு எதற்கு டபுள் இன்ஜின், கொரோனா நேரத்தில் தட்டுமுட்டு சாமான்களை தட்டுங்கள், வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறியவர் தான் பிரதமர் மோடி. கரப்ஷன், மாஃபியா, க்ரைம் நிறைந்திருப்பதாக தமிழகத்தை விமர்சிக்கிறார். கரப்ஷனுக்கு வாரிசான அதிமுகவின் இபிஎஸ், டெல்லி மாஃபியாவிடம் பணத்தை இழந்த அமமுக தினகரன், மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்து க்ரைமில் மாட்டிய அன்புமணி என மூவரும் மோடியுடன் தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved