Also Watch
Read this
By: Fyrose Banu

மேலூர் அருகே முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்து மனமுருகி வழிபாடு செய்தனர். மேலூர் அருகே பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாம் படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் இயற்கை எழிலுடன் அழகர் மலை உச்சியில் அமைய பெற்றுள்ளது. இங்கு ஏற்கனவே 2014ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.


முகூர்த்தக்கால் நாடும் விழா
அதன்படி இந்து சமய அறநிலைத்துறை உத்தரவின் பேரில், கடந்த வருடம் நவம்பர் 09ஆம் தேதி பாலாலயம் பூஜையுடன் திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி கும்பாபிஷேகத்திற்காக தயாராக உள்ளது. இதனைத்தொடர்ந்து, கும்பாபிஷேகம் விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நாடும் விழா இன்று திருக்கோவிலில் நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்
முன்னதாக, இன்று சஷ்டி மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவ மூர்த்திக்கு முன்பாக, முகூர்த்தக்கால் மரம் வைக்கப்பட்டு, திருக்கோயில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சஷ்டி மண்டபத்தில் இருந்து முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவர் சன்னதியை சுற்றி வலம் வந்து ராஜகோபுரம் வழியாக யாக சாலை மண்டபம் அமைக்கப்பட உள்ள வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அரோகரா கோஷத்துடன் முகூர்த்தக்கால் நடப்பட்டு மகா தீபாராதனை
அதன் பின்னர் நவதானியம், பால், பூஜை மலர்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் முகூர்த்த காலுக்கு வைக்கப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் முகூர்த்தக்கால் நடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் கோயில் துணை ஆணையர் யக்ஞநாராயணன், மற்றும் உபயதாரர்கள் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், திருக்கோயிலில் சுமார் ஒரு கோடிக்கு மேல் திருப்பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளதால், சில தினங்களில் யாகசாலை பூஜைகள் தொடங்கி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved