Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 12:04 PM
விசாரணைக் கைதி ஆகாஷ் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதியக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 17 நாட்களாக உடலை பெறாமல் அரசியல் செய்வதை ஏற்க முடியாது என்று, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கண்டிப்புடன் கூறி உள்ளனர்.
இளைஞர் ஆகாஷ் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது; மானாமதுரையை சேர்ந்த இளைஞர் ஆகாஷின் மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை இடமாறுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறிப்பட்டு இருந்தது.

அரசு வழக்கறிஞர்கள் வாதம்
இது மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான், அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி வாதிட்டதாவது;
இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது, நீதித்துறை நடுவர் 196 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்று உள்ளார், விசாரணை சரியான முறையில் சென்று வருகிறது. அரசே தாமாக முன்வந்தே சிபிசிஐடிக்கு மாற்றியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து தனி நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இறந்த இளைஞர் குடும்படுத்தினர் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டும், இதுவரை உடலைப் பெறவில்லை.

மனுதாரர் தரப்பு
இதுவரை காவல் துறையினர் கைது செய்யப்படவில்லை என்பதாலேயே குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுத் தரப்பு
ஏழு காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பொது நல வழக்கு எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது உதாரணம். இது தொடர்பான புகார் மனு 22ஆம் தேதி மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு உள்ளது. 23ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மனுதாரர் தரப்பு
அவசரம் கருதியே விரைவாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது
நீதிபதிகள் உத்தரவு
என்ன அவசரம்? உடலை பெற வேண்டாம் என தடுத்தது யார்? அதற்கு பொறுப்பு நீங்கள் தானே? நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்துக்காக பயன்படுத்த வேண்டாம். உடல் அழுகிவிட வேண்டும் என விரும்புகிறீர்களா? இது போன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்க இயலாது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டும், உடலை பெறாமல் இருப்பது ஏன்? உடலை பெற்று முறையாக இறுதி மரியாதை செய்ய வேண்டும். அதை விடுத்து உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

இந்த வழக்கு வேறு காரணத்துக்காக தாக்கல் செய்துள்ளது போல் தெரிகிறது. தற்போது உடலை வைத்து போராட்டம் நடத்துவது ஃபேஷனாகி விட்டது. உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமை. அதனை குடும்பத்தினர் உறுதி செய்ய வேண்டும். இந்த மனு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved