Also Watch
Read this
By: Fyrose Banu

ராமேஸ்வரத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் ராமேஸ்வரம் தீவு முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைக்கும் பணியினை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் இன்று துவக்கி வைத்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட எஸ்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் வருகை தரும் காரணத்தால் குற்ற சம்பவங்கள் மற்றும் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் விதமாக ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முக்கிய இடங்களில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான முதற்கட்ட பணி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

சிசிடிவி பொருத்தும் பணி துவக்கம்
ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் ராமேஸ்வரம் இணை காவல் கண்காணிப்பாளர் மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு கம்பங்கள் அமைத்து பொருத்தும் பணியினை துவக்கி வைத்தனர். அதன்பின் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்
ராமேஸ்வரம் தீவு பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக நகரின் முக்கிய இடங்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் தனியார் துறை மூலம் 150 கேமராக்கள் பொருத்துவதற்கான பணி இன்று துவங்கப்பட்டுள்ளது என கூறினார்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் மேற்பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இன்னும் இரண்டு மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவு செய்த பின்பு 24 மணி நேரமும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகள் நடைபெறும் என்றும் மேலும் தற்போது பொருத்தப்படும் கேமராக்கள் புதுவிதராக கேமராக்களாக கருதப்படுகிறது. இந்த வகையான கேமராக்கள் இணைய தடைபாடு இல்லாமல் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வயர்கள் மூலம் இணைய சேவை கேமராக்களுக்கு வழங்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தன்மை பொருந்திய கேமராக்களாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
காவல்துறைக்கு நண்பண்
இதற்கு முன்பு ராமேஸ்வரத்தில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடந்தால் பல்வேறு இடங்களுக்குச் சென்று சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டி இருக்கும் என கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் இந்த 150 கேமராக்கள் அமைக்கப்பட்ட பின்பு நேரடியாக சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்வதற்கு எளிமையான முறையில் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.
கடத்தல் சம்பவங்களை தடுக்கலாம்
மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது அவ்வாறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள், விரைவில் அவர்கள் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எஸ்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved