Also Watch
Read this
By: Fyrose Banu

உசிலம்பட்டி அருகே கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் விரைந்து கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


5 அடி பள்ளத்தில் தேங்கியுள்ள சாக்கடை நீர்
நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குளத்துப்பட்டி கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கழிவு நீர் கால்வாய் செல்வதற்கு வழியின்றி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை அருகில் குடியிருப்பு பகுதியில் ஐந்து அடி பள்ளத்தில் குளம் போல் தேங்கி கழிவு நீர் செல்ல வழி இன்றி புழு பூச்சிகளுடன் காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.


தேர்தலை புறக்கணிக்கப்போம்
மேலும் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர், உசிலம்பட்டி எம்எல்ஏ மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் வரை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. விரைந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை யார் நிவர்த்தி செய்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதாகவும் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved