Also Watch
Read this
By: Manigandan Raja
பைக்கில் சென்ற இளம் பெண்களை கிண்டல் செய்ததோடு, ஆபாசமாக பேசி வசமாக சிக்கிய இளைஞர்களின் கன்னத்தை பழுக்க வைத்த சம்பவம் சிதம்பரத்தில் நிகழ்ந்துள்ளது. நமக்கு என்ன? என்று கடந்து செல்லாமல் இரண்டு சிங்க பெண்கள் புல்லட்டில் துரத்தி சென்று மடக்கி வெளுத்த போது, அடி தாங்க முடியாமல் இருவரும் தப்பி சென்றனர்.

கஞ்சா போதையில் ஆபாசமாக...
பைக்கில் சென்ற இளம் பெண்களை கஞ்சா போதையில் ஆபாசமாக பேசி வசமாக சிக்கிய இரண்டு இளைஞர்கள், தர்ம அடி வாங்கியதோடு, வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி தனது பெண் தோழியான பவுமியா என்பவருடன் புல்லட் பைக்கில் சென்ற போது நம்பர் பிளேட் கூட இல்லாத ஸ்கூட்டியில் வந்த இரண்டு இளைஞர்கள், கஞ்சா போதையில் ஆபாசமாக பேசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமான இருவரும் அந்த இளைஞர்களை பைக்கில் அதிவேகமாக பின்தொடர்ந்து சென்றனர்.


கன்னத்தை பழுக்க வைத்தனர்
கீழத்தெரு மாரியம்மன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்களும் கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் மடக்கி இருவரையும் சரமாரியாக தாக்கினர். முதலில், என்னக்கா பண்ணேன்? என்று எதுவுமே தெரியாதது போல் கேள்வி எழுப்பிய இளைஞர், அடி தாங்க முடியாமல், சாரி...க்கா என கதறியதோடு முகத்தை மூடியபடி அங்கிருந்து தப்ப முயன்றார்.
வீடியோ எடுப்பதை பார்த்து, சாரி சொன்னபடியே அங்கிருந்து செல்ல முயன்ற இளைஞரை இருவரும் சேர்ந்து சரமாரியாக கன்னத்தை பழுக்க வைத்தனர்.

இருவர் மீதும் வழக்கு
பின்னர், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை பிடித்து கேட்ட போது, அவன் பேசியது எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறி, தப்ப முயன்று வசமாக வாங்கி கட்டி கொண்டார். இதையடுத்து இருவரும் அங்கேயே வாகனத்தை விட்டு விட்டு தப்பி சென்ற நிலையில், ஆர்த்தி, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரும் மீதும் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இது ஒரு பாடமாக இருக்கும்
பெண்கள் தானே என்ன செய்ய போகிறார்கள்? என்ற தைரியத்தில் ஆபாசமாக பேசிய இளைஞர்கள், வசமாக சிக்கிய நிலையில், இது போன்றவர்களை இப்படியே விட்டு விட கூடாது என ஆர்த்தி, வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.

பெண்களை ரோட்டில் யார் கிண்டல் செய்தாலும் எதிர்த்து கேள்வி கேளுங்கள் என்றும், நமக்கு என்ன வேண்டியது என்று அப்படியே விட்டு செல்லாதீர்கள் என வலியுறுத்தியுள்ள ஆர்த்தி, இது போன்று செயல்களில் ஈடுபடும் இளசுகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பைக்கில் சென்ற இளம் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved