வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு : தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஆளும் கட்சியினர் அதிரடியாக பல்வேறு திட்டங்களை அரசியல் கட்சிகள் போட்டி போட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக அரசு கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.3,000 வழங்கியது. அதனை பின்பற்றி புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங் -பா.ஜ., கூட்டணி அரசு, ரேஷன் கார்டுக்கு ரூ.3,000 ரொக்கம் மற்றும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உரிமைத் தொகை, தேர்தல் அறிவிப்பு வெளியானால் தடைபடும் என்பதற்காக, மூன்று மாதத்திற்கான தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ.2,000 சேர்த்து ரூ.5,000யை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் தமிழக அரசு செலுத்தியது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, புதுச்சேரி மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை அறிந்த முதல்வர் ரங்கசாமி, நேற்று துணை நிலை ஆளுநரை சந்தித்து, தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கும் சிறப்பு நிதி வழங்க வலியுறுத்தினார். இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது முகநுாலில், இன்ப அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (சிகப்பு ரேஷன் கார்டு) 63 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு.அவர்களின் குடும்ப தேவைகளை கருத்தில் கொண்டு அடுத்த 2 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி (மாதம் ரூ.2,500 வீதம்) மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். துணை நிலை ஆளுநரின் இந்த அறிவிப்பு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Related Link பென்னாகரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்