Also Watch
Read this
Posted on: Mar 28, 2026 12:17 PM

ஆசியாவிலேயே மிகபெரிய தேரான திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சைவ சமயத்தின் தலைமையிடம்
திருவாரூர் மாவட்டம், தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேர் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித் தேரோட்டம் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேர் வடம் பிடித்து இழுப்பது வழக்கம்.

பிரம்மாண்டமான தேர்
மொத்தம் 96 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக காட்சி தரும். தேரோட்டத்தை சீராக இயக்கிட திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்கள் எளிதாக நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டு உள்ளது. இந்த தேரின் முன்பகுதியில் கட்டப்படும் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 350 டன்னாகும்.

மிக பிரம்மாண்டமான ஆழித்தேரின் தியாகராஜர் சாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகு, காண்போர் வியக்கத்தக்கது. இந்த வருட பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் உற்சவம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தேரை அலங்கரித்து உள்ளனர்.

நாளை தேரோட்டம்
வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நாளை காலை சரியாக 9.05 மணிக்கு நடைபெற உள்ளது. ஆழித்தேரை தொடர்ந்து கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வலம் வரும். நாளை ஒரே நாளில் ஐந்து தேர்களும் நான்கு வீதிகளிலும் வலம் வர உள்ளது. தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதேபோல தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக நகராட்சி சார்பில் நான்கு வீதிகளிலும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த ஆழித்தேர் கீழ வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதி மேலவீதி வடக்கு வீதி வழியாக மீண்டும் மாலை 6 மணி அளவில் நிலையடியை வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved