Also Watch
Read this
By: Web Team

தேர்தல் ஆணையம் அதிரடியாக நடத்திக் கொண்டிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ((SPECIAL INTENSIVE REVISION)) எதிர்கட்சிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய பாஜக கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான், SPECIAL INTENSIVE REVISION அதாவது சுருக்கமாக SIR என அழைக்கப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றன.
குறிப்பாக பீஹாரின் எதிர்கட்சியாக இருக்கும் ஆர்.ஜே.டி தேர்தலை புறக்கணிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று கொதித்திருக்கிறது.
எதிர்கட்சிகள் சொல்வது போல சிறப்பு திருத்தத்தின் மூலம் பாஜக தேர்தல்களில் வெற்றி பெறமுடியுமா? அது எப்படி சாத்தியம் என்பதை தற்போது பீகாரில் நடந்து வரும் சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரங்களை கவனித்தால் புரியும் என்று சொல்கிறது எதிர்கட்சிகள்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யவும்,அப்படி வாக்களிப்பவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்க்காக உருவாக்கப்பட்டதுதான் அரசியலமைப்பின் 326 பிரிவு.
கிட்டத்தட்ட இதன் அடிப்படையிலேயே இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீவிரமான வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்கிறது. கடைசியாக 2003ம் வருடம் இந்தியா முழுவதும் வாக்காளர் திருத்தத்தை மேற்கொண்டது.
அதன் பிறகு இப்போது தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் எந்த கருணையும் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பை பீஹாரில் தொடங்கி நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ஆக் ஷனால் பீஹாரில் சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை பீஹாரில் 52 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
இவர்களின் விவரங்களையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நீக்கத்தைப் பார்த்தால் பீஹாரில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 23 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வாக்குகளை பீஹாரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்குகளுடன் ஒப்பிட்டால், அது அங்கு எதிர்கட்சியாக உள்ள ஆர். ஜே.டி.க்கு பெரும் பின்னடைவைத் தரும் என்கிறார்கள் பீஹார் அரசியல் விமர்சகர்கள்.
அதாவது, இந்தக் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 52 தொகுதிகளில் 5 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறது. நாற்பது தொகுதிகளில் வெறும் 3, 200 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.
இந்தக் கணக்கை வைத்துதான் பீஹாரில் பாஜக தனது வெற்றியை உறுதி செய்யவே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதன் பின்னணியில்தான் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, தங்களின் எந்த முறையீடும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என கொதித்திருக்கின்றன
சரியாகச் சொல்வதென்றால் இந்தியர் அல்லாத குடிமக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதே எங்கள் முதன்மையான நோக்கம் என்கிறது தேர்தல் ஆணையம். இந்தியாவில் அசாம், மேற்கு வங்கம், ஜார்கண்ட்டுக்கு அடுத்தபடியாக பீகாரின் சில மாவட்டங்கள் வங்காளம், நேபாளத்தை ஒட்டியுள்ளது.
சீமாஞ்சல் என அழைக்கப்படும் பீஹாரின் 4 மாவட்டங்கள், வங்கதேசத்தின் சிலிகுரி காரிடாரை ஒட்டி உள்ளது. இது பீஹாரின் 243 சட்டமன்ற தொகுதிகளில் 24 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் ஆணையம் நீக்கிய வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
செப்டம்பர் 30-ம் தேதியோடு சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பில், 20 லட்சம் பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 லட்சம் பேர் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. 7 லட்சம்பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை பெற்றவர்களாக இருப்பதால் இவர்களும் நீக்கப்பட்டுள்ளார்கள்.
1 லட்சம் வாக்காளர்கள் தொடர்பு கொள்ள முடியாதவர்களாக இருப்பதாக ஆணையம் அறிவித்துள்ளது. 15 லட்சம் பேர் சரிபார்ப்பு படிவங்களை சமர்பிக்காததால் இவர்களும் நீக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆக மொத்தம் 56 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில் சரிபார்ப்பு பணி முடிவடையும் செப்டம்பர் 30ம் தேதி நீக்கப்பட்டவர்களின் பட்டியல் இரண்டு கோடியைத் தொடும் என்று கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்சநீதிமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் முறையிட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னொருபக்கம் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை நாடுமுழுவதும் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்து விட்டது.
பீஹாரைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. ஏற்கெனவே தொகுதி வரையறையில் நாட்டின் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து போராடிய திமுக தற்போது விஸ்வரூபமெடுத்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தையும் எதிர்க்க துவங்கியிருக்கிறது.
தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக வைக்கும் புதிய பெரிய அரசியல் குற்றச்சாட்டாக இந்த SIR 2026 அமையும் என்பதில் சந்தேகமில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved