Also Watch
Read this
காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு, பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து வந்த த.வெ.க. தலைவர் விஜய், 7 மணி நேரம் தனக்காக காத்திருந்த தொண்டர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி பேசாமலேயே திரும்பி சென்றார்.

மதுரையில் இருந்து காரைக்குடி வரை வழிநெடுகிலும் வரவேற்பு மழையில் நனைந்த விஜய், சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது கூட்டத்தில் சிக்கி தடுமாறினார். கூட்டத்திற்கு அனுமதி வாங்கவே தலைகீழாக தவிக்கும் நிலை ஏற்படும் போது, காரைக்குடி வரை சென்றும் விஜய் மவுன பிரச்சாரம் செய்து திரும்பி உள்ளார்.

சிவகங்கை சீமையிலே...
சிவகங்கை சீமையில் விஜய் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்த விஜய், வியாழக்கிழமை காரைக்குடிக்கு பிரச்சாரத்திற்கு செல்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக காலையிலேயே சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், தனி விமானம் மூலமாக மதுரைக்கு சென்றார். மதுரை விமான நிலையத்தில் இறங்கி பிரச்சார வேனில் ஏறிய விஜய் காரைக்குடி நோக்கி புறப்பட்டார். மதுரையில் இருந்து புறப்பட்ட விஜய்யின் பிரச்சார வாகனத்தை வழிமறித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சோதனை நடத்தினர். அதிகாரிகள் வாகனத்தை வழிமறித்ததும் எழுந்து நின்று சோதனைக்கு ஒத்துழைப்பு அளித்தார் விஜய்.

நான்கு மணி நேரமாக...
மதுரையில் இருந்து காரைக்குடி செல்ல அதிகபட்சம் 2 மணி நேரம் தான் ஆகும் என்ற நிலையில், விஜய்யின் வாகனம் காரைக்குடி சென்று சேர 4 மணி நேரம் ஆனது. வழிநெடுகிலும் தொண்டர்கள், ரசிகர்கள் வரவேற்பு அளிக்க, விஜய்யும் உற்சாகமாக கையசைத்து சென்றார். வண்டியூர் சுங்கச்சாவடியில் விஜய்யை பார்க்க பெரும் கூட்டமே திரண்டு இருந்த நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு கையசைத்தும், விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டும் சென்றார்.

காரைக்குடியில் விஜய்
இதனிடையே, விஜய் பிரச்சார வாகனத்தை வழக்கம் போல பின் தொடர்ந்து சென்ற சில இளைஞர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். விஜய்யின் வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என பல முறை அறிவுறுத்தல் வழங்கியும் கூட சில இளைஞர்கள் வீம்புக்கு, பின் தொடர்ந்து செல்வதின் மூலம் விபத்து தொடர் கதையாகி வருகிறது.

ரிங்ரோடு அருகே விஜய்க்கு கை கொடுக்க வேனில் ஏற முயற்சித்த தொண்டரை மேலே அமர்ந்திருந்த பவுன்சர், பூட்ஸ் காலால் மிதித்து தள்ளியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் இருந்தே பிரச்சார களத்தில் கூடியிருந்தவர்கள் மதிய வெயிலுக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து போக, பின்னர் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. பிரச்சார வாகனத்திற்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள், பூக்களை தூவி விஜய்யை வரவேற்று மகிழ்ந்தனர். காரைக்குடிக்குள் விஜய்யின் பிரச்சார வாகனம் நுழைந்ததும் சாலை முழுக்க தொண்டர்கள் தலையால் நிரம்பியது. மலர்களை தூவியும், புகைப்படங்களை பரிசாக வழங்கியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சைக்கிள் ஓட்டிய விஜய்
திடீரென பிரச்சார வேனில் இருந்து இறங்கிய விஜய், சைக்கிள் ஓட்டிச் சென்றார். சைக்கிளில் வந்த விஜய்யை நெருங்க ரசிகர்களும், தொண்டர்களும் முண்டியடிக்க, கூட்டத்திற்குள் சிக்கி விஜய்யும் தடுமாறி கீழே விழ தெரிந்தார். பின்னர் ரசிகர்களும், பவுன்சர்களும் விஜய்யை தாங்கி பிடித்தனர். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் பேசுவதாக இருந்த கண்ணதாசன் சிலை ரவுண்டானா பகுதியிலும் காலையில் இருந்தே ரசிகர்களும், தொண்டர்களும் சாரை சாரையாக குவிந்த வண்ணம் இருந்தனர்.

மதியம் 12 மணியில் இருந்து 2.30 மணி வரைக்கும் மட்டுமே 16 நிபந்தனைகளுடன் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், விஜய் தாமதமாக வந்ததால் காவல்துறை தரப்பில் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

போலீசார் அனுமதி மறுப்பு
சில மணித் துளிகள் மட்டுமே தாமதமாக வந்த விஜய், காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து வேறு வழி இல்லாமல் வேட்பாளர் பிரபுவை மட்டும் அறிமுகம் செய்து வைத்து விட்டு திருச்சி நோக்கி புறப்பட்டார். கல்லூரிகள் நிறைந்த பகுதி என்பதால் காரைக்குடி மீட்டிங்கில் ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கூடியிருந்தனர். சுமார் 7 மணி நேரமாக கூடியிருந்த நிலையில், விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது தொண்டர்களை விரக்தி அடையச் செய்திருக்கிறது.

அனல் பறக்கும் பிரச்சார களம்
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தினமும் காலை மாலை என, இரு மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். அதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைந்தது 4 தொகுதிகளிலாவது தினமும் பிரச்சாரம் செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சீமானும் தினமும் ஆங்காங்கே வாகன பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், விஜய்யின் பிரச்சாரம் மட்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நடந்து வருகிறது. விஜய்யின் பிரச்சாரத்திற்கு வழக்கமாக காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம் என்ற நிலையில், உரிய அனுமதி கிடைப்பதில்லை என பல முறை த.வெ.க.வும் குற்றம் சாட்டியிருக்கிறது. அப்படி இருக்கையில், காவல் துறையிடம் அனுமதி வாங்கி ஏற்பாடு செய்து தொண்டர்கள் பெருமளவில் கூடியிருக்கும் போது, விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனமாக திரும்பி வந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved