Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 11:01 AM
சேலையூர் காவல் நிலையத்தில், முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று, காவல் நிலையத்தில் கதறி அழுத இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பள்ளி முதல்வர்
சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர், மேடவாக்கம் பகுதியில், தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று வருடங்களாக பிரிந்து இருந்ததோடு விவாகரத்தும் பெற்று உள்ளார். விவாகரத்து பெற்ற நிலையிலும், கணவன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இருவரும் தொடர்ந்து தொலைபேசியில், சேர்ந்து வாழும் எண்ணத்துடன் பேசி வந்து உள்ளனர்.
வாழ்க்கையை மாற்றிய இன்ஸ்டா
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு instagram மூலம் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர், ”நீ ரொம்ப அழகா இருக்க உன்னிடம் பேச வேண்டும் போல் இருக்கிறது” என குறுந்தகவல் அனுப்பி உள்ளார். முதலில் கண்டு கொள்ளாமல் விட்டவர், தொடர்ந்து குறுந்தகவல் வந்ததால், விசாரித்து நட்பாக பேச ஆரம்பித்து உள்ளார். ஹரி கிருஷ்ணன் தான் பில்டராக இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் இருவரும் தொலைபேசியில் நட்பாக பேசி வந்த நிலையில் தான், உன்னை பார்க்க வேண்டும் என ஹரிகிருஷ்ணன் கூறி உள்ளார்
நேரில் சந்திப்பு
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி உணவு இடைவேளையின் போது, இருவரும் தனியார் பள்ளியின் முன்புறம் காரில் அமர்ந்து பேசி உள்ளனர். நட்பாக பேசிக் கொண்டிருந்த ஹரி, திடீரென அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாகனத்தில் இருந்து இறங்கி, எச்சரித்தவாறு பள்ளிக்குள் சென்று விட்டார். இதனை தனது வெளிநாட்டில் வாழும் கணவரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். உடனடியாக கணவர், ”நமக்கு எதற்கு வம்பு அவர்கள் பெரிய தொழிலதிபர்கள், அவர்களின் தொடர்பை துண்டித்துவிடு” எனக் கூறியதன் அடிப்படையில், ஹரியிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார்.
வீடியோ இருப்பதாக மிரட்டல்
ஆனால், மீண்டும் மீண்டும் பேசுமாறு வற்புறுத்திய ஹரி, காரில் நடந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளேன், அதனை வெளியிடப் போகிறேன் எனத் தொடர்ந்து மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அப்படியெல்லாம் செய்து விடாதே என தொடர்ந்து நான் உன்னுடன் பேசுகிறேன் எனக் கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க
கணவர் விரைவில் வெளிநாட்டிலிருந்து வருகிறேன், சேர்ந்து வாழலாம் என்று, கூறியதன் அடிப்படையில் குடும்ப புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் டிபி ஆக வைத்துள்ளார்.
குடும்ப புகைப்படத்தால் ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் சேலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு வந்து அவரை வெளியில் வருமாறு அழைத்து, என்னுடன் பேசி விட்டு, உன் கணவருடன் சேர்ந்து வாழப் போகிறாயா? என கோபமாக கூறி, சரமாரியாக தாக்கியதாகவும் கழுத்தைப் பிடித்து கொலை செய்ய முயற்சித்து உள்ளதாகவும் தெரிகிறது.
காவல் நிலையம் சென்ற பஞ்சாயத்து
இதுதொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தி உள்ளனர். இதனால், காவல் நிலையத்திற்கு வந்த இளம்பெண், ஹரியை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளரிடம் கோரிக்கை வைத்தார். அதே வேளையில் வழக்கறிஞர்களுடன் காவல் நிலையம் வந்த ஹரி கிருஷ்ணனிடம், முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை, அவர் சிரித்துக் கொண்டே பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த பெண், என் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே? எனக் கூறி ஆத்திரத்தில் தகாத வார்த்தையில் திட்டி தீர்த்தார்.
கதறி அழுத இளம்பெண்
இந்நிலையில், எனக்கு இந்த நியாயம் கிடைக்காது என ஸ்டேஷனிலிருந்து வெளியே ஓடிவந்து கதறி அழுத அந்த பெண், ஆத்திரத்தில் கத்தி உள்ளார். காவல் நிலைய வாசலிலேயே அமர்ந்து கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வயிற்றில் அடித்துக் கொண்டு கதறி அழுது, மயங்கும் நிலைக்கு வந்ததால், காவல்துறையினர் முறையாக விசாரிக்கிறோம் எனக் கூறி காவல்
நிலையத்திற்குள் அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved