Also Watch
Read this
Posted on: Jan 19, 2026 07:09 AM
By: Manigandan Raja
எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், இம்மாத இறுதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி
தமிழகத்தில் ஏப்ரல் மாத வாக்கில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, எஸ்.ஐ.ஆர், எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. தகுதியுள்ள வாக்காளர்களை, பட்டியலில் இடம்பெற செய்வதற்காக, இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
97.30 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
முதல் கட்டமாக, 2025ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளபட்டன. தமிழகம் முழுவதும், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 6.41 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, கணக்கெடுப்பு படிவங்களை வழங்கினர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீண்டும் பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்காத 97.30 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம்
இறுதி வாக்காளர் பட்டியலை, பிப்ரவரி 17ம் தேதி வெளியிட, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக, தகுதியான வாக்காளர்களை சேர்க்க, மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம், நீக்கம், திருத்தம் தொடர்பாக, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான கால அவகாசம், நேற்று ஜனவரி-18ஆம் தேதி உடன் முடிந்தது. இதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, 13.03 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்க கோரி, 35,646 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசத்தை தேர்தல் கமிஷன் நீட்டித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved