Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 08:55 AM

தலசேரியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன்...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. கேரளத்தில், தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் தனது வேட்புமனுவை, முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். தனது வேட்புமனு ஆவணங்களை காலை 11 மணியளவில், தலச்சேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார். அவற்றை கண்ணூர் பதிவாளர் ஏ.பி.சத்யன் பெற்றுக் கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கே.ராகேஷ், மூத்த தலைவர் ஜெயராஜன், அவைத்தலைவர் ஷம்ஷீர் மற்றும் அவரது அரசியல் செயலாளர் பி.சசி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஏழாவது முறையாக...
முதல்வர் பினராயி விஜயன், தனது அரசியல் பயணத்தில் 7ஆவது முறையாகவும், தர்மடம் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். முன்னதாக, குத்துப்பரம்பா தொகுதியில் இருந்து மூன்று முறையும், பய்யனூர் தொகுதியில் ஒரு முறையும், பினராயி விஜயன் வெற்றி பெற்று உள்ளார்.
காங்கிரஸ் vs பாஜக Vs மார்க்சிஸ்ட்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி யுடிஎஃப், வி.பி.அப்துல் ரஷீத் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
பாஜக தனது வேட்பாளராக கே.ரஞ்சித் என்பவரை அறிவித்து உள்ளது. 80 வயதாகும் பினராயி விஜயன், மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற ஒரு வாகனப் பேரணி மூலம், தர்மடம் தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved