Also Watch
Read this
By: Web Team
வருவாய்த் துறை ஊழியர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி போராடிய ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை வண்ணாரபேட்டையில் நடந்த சாலை மறியல்
திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் தடைபட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது.

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய வருவாய்த் துறை ஊழியர்கள், பிறகு விழுப்புரம் - திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டம்
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு நடைபெற்ற சாலை மறியலில் வருவாய்த் துறை ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கண்டன முழக்கங்களை எழுப்பிய அலுவலர்களை கைது செய்த போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.

ராணிப்பேட்டையில் வருவாய் துறை ஊழியர்கள் சாலை மறியல்
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் குவிந்த வருவாய்த் துறை ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை ஊழியர்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலையில் உருண்டு, போராட்டம் நடத்திய நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சையில் ஊர்வலமாக வந்த வருவாய்த்துறை ஊழியர்கள்
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்த வருவாய்த் துறை ஊழியர்கள், அதன் பிறகு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சாலை மறியல்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்திய வருவாய் துறை அலுவலர்கள், சுமார் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தேனியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய வருவாய்த் துறை ஊழியர்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved