Also Watch
Read this
By: Manigandan Raja

தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார் :
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரூர் அருகேயுள்ள புங்கம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையின் போது, நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பர்கூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவின் குமார் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிமுகவினர் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வாகனத்தை தடுத்து நிறுத்தியதுடன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களை மிரட்டியதாகவும் நாம் தமிழர் கட்சித் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் வேட்பாளர் கவின் குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தொண்டர்கள்.
தங்கள் வாகனத்தைக் கொண்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அந்த வழியாக வந்த அதிமுக வேட்பாளர் இ.சி. கோவிந்தராஜன் அவர்களின் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் அவரது தேர்தல் பரப்புரை கணிசமாகத் தாமதமானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், பாதுகாப்புப் பணியில் போலீசார் உரிய நேரத்தில் இல்லாததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம் என
நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் பர்கூர் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இதுபோன்ற மோதல் போக்குகளைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved