Also Watch
Read this
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு கொடுத்து அனுப்பினார்.

அரசியல் மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. 70க்கும் மேற்பட்ட இடங்களுடன் இரண்டாம் இடத்துக்கு, ஆளும் கட்சியான திமுக தள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் வகையில் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆளுநருக்கு கடிதம்
இன்று காலை ஜனநாயக மரபுப்படி தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி உள்ளார். மு.க. ஸ்டாலினின் இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

புதிய மாற்றங்கள்
வெற்றி பெற்ற தவெகவின் எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் நிலையில், தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன. புதிய அமைச்சரவையில் இடம் பெறப்போவது யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தீர்ப்பே...
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியிலேயே தோல்வியை தழுவிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலில் வாக்காளர்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், மக்களாட்சியில் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழக மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved