Also Watch
Read this
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை, மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 85 சதவீத வாக்குப்பதிவும், புதுச்சேரியில் 90 சதவீத வாக்குப்பதிவும், கேரளம் மாநிலத்தில் 78 சதவீத வாக்குப்பதிவும், அசாம் மாநிலத்தில் 85 சதவீத வாக்குப்பதிவும், மேற்கு வங்காளத்தில் முதல் கட்டத்தில் 93 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 92 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி இருந்தன. இந்த மாநிலங்களில் வாக்கும் எண்ணிக்கையானது நாளை காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

242 கூடுதல் பார்வையாளர்களை நியமித்து உத்தரவு
மேற்கு வங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 242 கூடுதல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அமைதியான மற்றும் வெளிப்படையான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த இரட்டை அடுக்கு கண்காணிப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. 165 கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் 77 போலீஸ் பார்வையாளர்கள் என மொத்தம் 242 அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

285 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஃபால்தா சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற 2ஆவது கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைமுறை கடுமையாக மீறப்பட்டதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, அத்தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திரிணாமுல் காங். 200 இடங்களை கைப்பற்றும்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சியே அன்றி வேறில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200 இடங்களை கைப்பற்றி, இமாலய வெற்றி பெறப் போவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட அவர், களத்தில் ஓய்வின்றி உழைத்ததற்காக பாராட்டு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved