Also Watch
Read this
தமிழ்நாட்டில், தொடர் குற்றச்செயல்கள் அரங்கேறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா? என்றும், எங்கே போனது உங்கள் சிங்கப்பெண் அதிரடிப் படை? என்றும் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சம்பவங்களே சாட்சி
இதுதொடர்பாக, எதிர்க்கட்சிக்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டில், கடந்த 15 நாளில் 25 கொலை, 4 இரட்டைக் கொலை, 19 பாலியல் குற்றம் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

முதல்வரின் சொந்த தொகுதியில்...
கோவையில், இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. முதல்வரே, இது தமிழ்நாடா, உத்தரப் பிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?

ஏற்க முடியாது...
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதல்வர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறியே ஆக வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved