Also Watch
Read this

எபோலா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி உள்ளது.
உலக நாடுகளில்...
காங்கோ, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால், அங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளதை தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் WHO அந்த நாடுகளுக்கு சர்வதேச அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த வைரஸ், மேலும் பரவாமல் தடுப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை, மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கை, தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்திய சுகாதாரதுறை அறிவிப்பு
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. சராசரியாக, இந்த வகை எபோலா தொற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு 100 பேரில் சுமார் 30 பேர் உயிரிழந்து விடுகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று, மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர். உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

தடுப்பூசி அற்ற அரிய வகை
எபோலா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி உள்ளது. ஆனால், தற்போது தடுப்பூசி இல்லாத அரிய வகை வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது, ஆப்பிரிக்காவில் பரவி வரும் இந்த எபோலா நோய்த் தொற்றானது, புந்திபுகியோ (Bundibugyo virus) எனப்படும் ஒரு அரிய வகை எபோலா வைரஸ் திரிபினால் உருவானது என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த குறிப்பிட்ட ஆபத்தான வைரஸ் திரிபுக்கு உலக அளவில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உலக நாடுகளின் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மிக வேகமாகப் பரவும் எபோலா தொற்று
எபோலா என்பது பாதிக்கப்பட்ட மனிதர்களின் ரத்தம், வாந்தி, வியர்வை, விந்து போன்ற உடலின் பல்வேறு திரவங்களை நேரடியாகத் தொடுவதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய தொற்றுநோய். இந்த தொற்றுநோய் பொதுவாக மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்பட்டாலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சரியான நேரத்தில் முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படாவிட்டால் இது மிகக் குறுகிய காலத்தில் உயிரைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது.

நோய்த்தொற்று அறிகுறிகள் என்ன?
பொதுவாக, மனிதர்களின் உடல்நிலையை பொறுத்து 2 முதல் 21 நாளில் அறிகுறி தென்படும். இந்த வைரஸ் நோய்த்தொற்று இருந்தால் திடீர் காய்ச்சல், சோர்வு, உடல்நலக்குறைவு, தசை வலி, தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோல் தடிப்பு, சிறுநீரக, கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி ஏற்படலாம். அதேசமயம், சில நோயாளிகளுக்கு வாந்தி, மலத்தில் ரத்தம், மூக்கு, ஈறு மற்றும் பிறப்புறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

வைரஸ் பரவுவது எப்படி?
இறந்துபோன அல்லது அழுகிப்போன கொரில்லா, குரங்கு, வவ்வால், சிம்பன்சி, மான், முள்ளம்பன்றி போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளின் ரத்தம் அல்லது எச்சம் ஆகியவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு விலங்குவழி நோய். எபோலா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வாந்தி, ரத்தம், விந்து மற்றும் தொடுதலின் மூலமாக மற்றொரு நபருக்கு எளிதில் பரவுகிறது.

கொரோனா போலவா...?
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று நோய் ஒட்டுமொத்த உலகையுமே பேரழிவின் விளிம்பில் நிறுத்தியது. வெளிநாடு சென்றவர்கள் மூலம் பரவத் தொடங்கிய கொரோனா, சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வேகமாக பரவியது. இந்த பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோவிட்-19 காரணமாக, இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மீண்டும் ஊரடங்கா?
எபோலா வைரஸ் திரிபு தொற்றின் பரவல் அதிகரித்தே வந்தாலும், கொரோனா அளவிற்கு வேகம் எடுக்கவில்லை. அதனால், ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார நிறுவனம், ஆறுதல் தந்துள்ளது. ஆனாலும், நிலைமை மோசமானால், மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான பெருந்தொற்று அவசர நிலை Pandemic Emergency அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக, எச்சரிக்கை அவசியம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved