திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வருகிற 9ஆம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் நிலையில், திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைக்க உறுதியேற்போம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு மடல் விடுத்துள்ளார். திமுக கூட்டணி உடைந்து விடாதா? என்று, அரசியல் எதிரிகள் ஏங்கிக் கிடந்ததாகவும், ஆஃபர் கொடுத்தாவது, நமது கூட்டணியை உடைத்திடலாம் என்று, எதிர்க்கட்சிகள் முயற்சி செய்ததாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மடலில் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:திருச்சி, சிறுகனூரில் மார்ச் 9ஆம் தேதி, மாநாடு நடைபெற இருக்கிறது. 75 ஆண்டுகளைக் கடந்த இந்த பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்று கூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணி வகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்பு தானே. தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக் கொண்டது உழைப்பு. அந்த உழைப்பு இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பதற்கான உழைப்பு. இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளை கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, லட்சிய நோக்கத்துடன் பயணிக்கின்ற வாய்ப்பு, உங்களால் கட்சித் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டவனான உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள், நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்.இதனால் தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா? என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனை, கனவுகளை ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.தமிழகத்தில் இடமில்லை மதவெறி அரசியலுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வு மிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயக தன்மையுடனும் ஆலோசனை நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன். திராவிட மாடல் ஆட்சியினால் பயன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.தொடர் மாநாடு மண்டல வாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், மகளிரணியின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், பயிற்சி மாநாடுகள் என்று, தேர்தலை முன்னிட்டு நாம் நடத்திக் காட்டிய ஒவ்வொரு மாநாட்டிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட உடன் பிறப்புகள், கருப்பு சிவப்பு படையாய் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.இதனை தொடர்ந்து, மார்ச் 9ஆம் தேதி, ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரிலான நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவிருக்கிற திருச்சி, சிறுகனூரில் தான், 5 ஆண்டுகளுக்கு முன் 2021ஆம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது உடன்பிறப்புகளான உங்களிடமும் பொது மக்களிடமும் நான் வைத்த கோரிக்கை, ‘திமுகவுக்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’ என்பது தான்.திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதிதொடர் பயணம், தடையில்லா வளர்ச்சி, ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றம் என்று, அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும். தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்.இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார். Related Link வெற்றிகரமாக தொகுதி உடன்பாடு - மு.க.ஸ்டாலின் பெருமிதம்