Also Watch
Read this
By: Manigandan Raja
சபரிமலை அய்யப்பன் கோவில் துவார பாலகர் சிலைக் கவசத்தில் தங்கம் திருடப்பட்ட வழக்கு விசாரணை வளையத்தில் நடிகர் ஜெயராம் கொண்டு வரப்பட்டுள்ளார். முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உன்னிகிருஷ்ணன் போற்றி உடனான தொடர்பு குறித்து சென்னையில் உள்ள வீட்டில் வைத்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது.
வீட்டில் வைத்து பூஜை செய்தேன் - ஜெயராம்
துவார பாலகர் தங்கக்கவசத்தை, உன்னிகிருஷ்ணன் போற்றி தனது வீட்டிற்கு கொண்டுவந்து சிறப்பு பூஜைகள் செய்ததாக போலீசாரிடம் நடிகர் ஜெயராம் தகவல் தெரிவித்துள்ளார். மற்றபடி, உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் எந்தவித பணப் பரிமாற்றமும் செய்யவில்லை என்றும், மோசடி குறித்து தனக்கு தெரியாது என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

நடிகர் ஜெயராமிடம் விசாரணை
சபரிமலை கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் கேரளா, கா்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில், தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்குச் சொந்தமான பெங்களூரூவில் உள்ள இடங்கள், திருவிதாங்கூர் தேவஸ்சம் வாரிய முன்னாள் தலைவா் பத்மகுமாருக்குச் சொந்தமான கேரளத்தில் உள்ள இடங்கள் மற்றும் நகை வியாபாரிகள் சிலருக்குச் சொந்தமான இடங்களின் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘செப்புத் தகடுகள்’
தங்கத்தால் செய்யப்பட்ட கோயிலின் புனிதப் பொருள், வேண்டுமென்றே ‘செப்புத் தகடுகள்’ என்று பதிவேடுகளில் தவறாகப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 2019 முதல் 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கோயில் வளாகத்திலிருந்து அவை சட்ட விரோதமாக அகற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மேலும், இந்தப் புனிதப் பொருள், சென்னை மற்றும் கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, ரசாயன செயல்முறை மூலம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, பின்னா் விற்பனை செய்யப்பட்டு பணமாக மாற்றப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

முறைகேடு மற்றும் நிதி கையாடல், கைது
சபரிமலையில் கோயில் காணிக்கை, சடங்கு தொடர்பான செயல்பாடுகளிலும் முறைகேடு மற்றும் நிதி கையாடல் நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சபரிமலை தங்கக் கவச மோசடி தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்க கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் இருவர், கோயில் தந்திரி கண்ரடரு ராஜீவரைக் கைது செய்தது.

விசாரணை வளையத்தில் ஜெயராம்
கேரள காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், இந்த முறைகேடு தொடர்பாக பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை கடந்த 9ஆம் தேதி பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதனிடையே, நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியானது.
இந்நிலையில், சபரிமலை தங்க கவச முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சென்னையில் உள்ள இல்லத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள ஜெயராம் இல்லத்தில் அவர் வாக்கு மூலம் அளித்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் நடிகர் ஜெயராமுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved