Also Watch
Read this
By: Manigandan Raja
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் குற்றவாளிகளான 9 போலீசாருக்கும் ஏப்ரல் 2ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
வழக்கின் பின்னணி...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் 59 வயதான ஜெயராஜ், இவரது மகன் 31 வயதான பென்னிக்ஸ். தந்தை, மகன் இருவரும் பஜாரில் செல்போன் விற்பனை, பழுது பார்க்கும் கடை வைத்திருந்தனர். 2020 ஜூன் 19ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு சமயத்தில், இரவில் நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

இருவரும் அடுத்தடுத்து உயிழரிப்பு
அன்று இரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு 5 மணி நேர இடைவெளியில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர், சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
சிபிஐ விசாரணை
இந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் திருப்தி இல்லாததால் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்பேரில், 2020 ஜூன் 29ஆம் தேதி வழக்கு, சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஜூலை 7ஆம் தேதி சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. கொலை வழக்காக பதிவு செய்து அப்போதைய சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து மற்றும் பால்துரை ஆகிய 10 பேரை, சிபிஐ கைது செய்து, அனைவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தது.

9 பேர் மீது விசாரணை
விசாரணையின்போது பால்துரை உயிரிழந்தார். இதனால், மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை, மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2020 டிசம்பர் 21ஆம் தேதி முதல், மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணை பின்னர், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2021 பிப்ரவரி 18ஆம் தேதி முதல் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் பெண் போலீஸ்காரர்கள் பியூலா, ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியம், முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் குறுக்கு விசாரணை என்று, அனைத்தும் கடந்த 16ம் தேதி முடிந்த நிலையில், இன்று மார்ச் 23ஆம் தேதி மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்றார். இதன்படி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசித்தார்.
அப்போது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், மார்ச் 30ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், மத்திய மாநில அரசுகளின் அறிக்கை வராத நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதிக்கு தண்டனை விவரம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved