தேவரின் உருவப்படம் எரிந்து சேதம் : நெல்லை திம்மராஜபுரம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு பீடத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை அடுத்த திம்மராஜபுரம் பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழு உருவப்படத்துடன் கூடிய நினைவு பீடம் அப்பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை. மர்ம நபர்கள் பீடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில், பீடத்தில் இருந்த முழு உருவப்படம் தீக்கிரையாகி சேதமடைந்தது. மேலும், வெடிப்பால் கண்ணாடிகள் உடைந்து பீடம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கவனித்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி 200-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திம்மராஜபுரம் வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மறிக்கப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் தேவர் பீடம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருவதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போக்குவரத்து மாற்று வழிகளில் மாற்றி விடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link சிலம்பம் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து சாதனை முயற்சி