கொடைக்கானலில் சொகுசு விடுதியில் துணை நடிகையின் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இனிக்க இனிக்க பழகிய பெண்ணே பணத்துக்கு ஆசைப்பட்டு, கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்து ஆட்களை அனுப்பி வைத்தது அம்பலமாகியுள்ளது. சொகுசு விடுதியின் ROOM BOYயும் உடந்தையாக மாறிய நிலையில், காவல்துறை கையில் சிக்கியது எப்படி? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.மாயாவி படத்தில் நடித்த நடிகை விஷ்ணுபிரியா நடிகர் சூர்யாவுடன் இணைந்து மாயாவி படத்தில் நடித்த நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தையான, தொழிலதிபர் சூர்ய நாராயணன் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொடைக்கானலில் நடத்தி வந்த சொகுசு விடுதியில் வைத்து சேரில் அமர வைக்கப்பட்ட நிலையில், உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்டு மூச்சுத்திணறி சூர்ய நாராயணன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்று காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. அந்த வகையில், யார் யார் சொகுசு விடுதிக்கு வந்து சென்றார்கள்? யார் யாரெல்லாம் தங்கி இருந்தார்கள்? என விசாரித்த காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்காமல் போனது. இதனையடுத்து, சொகுசு விடுதியில் வேலை செய்த ஊழியர்கள் ஆறுமுகம், முரளி ஆகிய இருவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். முதலில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற அடிப்படையில் இருவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் அளித்த பதில் சந்தேகத்தை கொடுக்கவே துருவித் துருவி விசாரணை நடத்தினர்.அரக்கோணம் கிரிஜா உடன் தொடர்பு இந்த விசாரணையில் தான், துணை நடிகையின் தந்தையை பணத்திற்காக எப்படியெல்லாம் திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள் என்ற மொத்த உண்மையும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சூர்ய நாராயணனுக்கும், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கிரிஜா என்பவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கிரிஜா ஹவாலா ஏஜெண்ட்டாக இருக்கும் நிலையில், தனது மகனின் நண்பனான சாம் என்பவனிடம் ஹவாலா மூலம் மாற்றி கொடுப்பதாக சொல்லி 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை சாம் கேட்டுக் கொண்டே இருக்க, கிரிஜா பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து ஏமாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.சொகுசு விடுதிக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல்சாம் கொடுத்த பணத்தை ஏப்பம் விட்ட கிரிஜா, பணத்தை திருப்பி கொடுக்க வழி தெரியாமல் யோசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், சென்னை ECRல் சூர்ய நாராயணனுக்கு சொந்தமான சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த விஷயம் கிரிஜாவுக்கு தெரியவர, கட்டிடத்தின் அசல் ஆவணங்களை திருடி தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என கிரிஜா திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்தை சொந்தமாக்கிக் கொள்ள உதவினால், குறிப்பிட்ட தொகையை தருவதாக சாம்-ஐ நம்ப வைத்த கிரிஜா, சொகுசு விடுதிக்கு 5 பேர் கொண்ட கும்பலை அனுப்பிவைத்திருக்கிறார். சொகுசு விடுதியின் ஊழியர் முழுக்க முழுக்க உடந்தைகிரிஜா அனுப்பி வைத்த 5 பேரும் கடந்த 13ஆம் தேதியே சொகுசு விடுதிக்கு வந்து வாடிக்கையாளர்கள் போல அறை எடுத்து தங்கியிருந்து நோட்டமிட்டு விட்டு காலி செய்திருக்கிறார்கள். மீண்டும் 19ஆம் தேதி சொகுசு விடுதிக்கு வந்த நபர்கள் அறை எடுத்து தங்குவது போல தங்கியிருந்ததோடு, சூர்ய நாராயணன் வாயிலும், மூக்கிலும் டேப்பை சுற்றி வைத்து விட்டு அவர் அணிந்திருந்த நகைகள், கல்லாவில் இருந்த பணம், கட்டிட டாக்குமெண்ட் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தப்பியிருக்கிறார்கள். இந்த கொலை சம்பவத்திற்கு சொகுசு விடுதியின் ஊழியர் ஆறுமுகம் முழுக்க முழுக்க உடந்தையாக இருந்திருக்கிறார்.தொடர் விசாரணையில் காவல்துறை சூர்ய நாராயணன் எப்போது சொகுசு விடுதிக்கு வருவார்? முக்கிய ஆவணங்களை எங்கு வைத்திருப்பார் என எல்லா விபரங்களை ஆறுமுகம் சொல்ல, கொலை கும்பலும் கச்சிதமாக பிளான் போட்டு தூக்கியிருக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு கூட பழகிய கிரிஜாவே கொலை கும்பலை வைத்து தூண்டி விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்த, இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? ஹவாலா ஏஜெண்ட் கிரிஜாவுக்கு வேறு என்னென்ன தொடர்பு? என்பதெல்லாம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. Related Link கொடைக்கானல் - துணை நடிகையின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்