Also Watch
Read this
By: Manigandan Raja
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே காதல் கணவனை விட்டு பிரிந்து இன்ஸ்டா கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் மூழ்கிய அண்ணன் மகளை, அவரது சித்தப்பா இரவில் அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்காதலை கைவிட கணவன் தொடங்கி பெற்றோர் மற்றும் உறவினர்கள் வரை அனைவரும் அறிவுரை கூறியபோதிலும் கேட்காத அப்பெண்ணை, அவரது சித்தப்பா, கம்பி மற்றும் அரிவாளால் அடித்தே கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருமணத்தை மீறிய தகாத உறவில்...
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் கசந்து போக, கள்ளக் காதலனுடன் இனிக்க இனிக்க வீடியோ காலில் பேசிய இளம்பெண்ணை அடித்தே கொன்ற மாற்றுத்திறனாளி சித்தப்பா... என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலையத்திற்கு ஞாயிற்றுகிழமை மதியம் அரிவாள் மற்றும் கம்பியுடன் வந்த தலக்குளம் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி ராஜேஷ் என்பவர் தனது அண்ணன் மகள் சுபிதாவை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறி போலீஸாரையே அதிர வைத்தார். இதனையடுத்து ராஜேஷ் அளித்த தகவலின் படி, நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், உள்பக்கம் தாழிட்ட அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜேஷை போலீசார் விசாரிக்கையில், அண்ணன் மகள் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்து கொண்டு தறிகெட்ட பாதையில் செல்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அடித்தே கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.

வீடே இரண்டாகும் அளவுக்கு பிரச்சனை
தச்சு தொழிலாளியான அருண் பிரசாத்தும், சுபிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 10 ஆண்டுகளாகி முத்து போல் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. அடிக்கடி கணவன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், மனைவி, குழந்தைகளை கவனித்து கொண்டு வீட்டுப்பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் சமையல் வேலைக்கு சென்றிருக்கிறார். பள்ளிக்கூடம் சென்று வந்த சுபிதாவுக்கு, இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பக்கத்து ஊரை சேர்ந்த அனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்படவே போக போக கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக சுபிதா அனிஷ் தகாத உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மனைவியின் கள்ளக்காதலை அறிந்த கணவன் கண்டித்ததாக கூறப்படும் நிலையில் வீடே இரண்டாகும் அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கணவனிடம் கோபித்து கொண்ட சுபிதா தனது குழந்தைகளுடன் வீராப்பாக தனது பொறந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

2 நாள் கூட கணவனுடன் வாழாத சுபிதா
தாய் வீட்டுக்கு சென்றும் கூட திருந்தாத சுபிதா, வீட்டு மாடியிலுள்ள தனது அறைக்கு அனிஷை அவ்வப்போது வரவழைத்து தனிமையில் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்த அனீஷை பிடித்த அப்பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கவே பெரும் பிரச்சனை ஏற்பட்டது. சுபிதா திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை விரும்பாத பெற்றோர் புத்தி மதி கூறி, கோவையில் தனது மகளையும், மருமனையும் குடி வைத்தனர். 2 நாள் கூட கணவனுடன் வாழாத சுபிதா பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு மீண்டும் தாய் வீட்டை வந்து சேர்ந்தார்.

சித்தப்பா உடன் வாக்குவாதம், அடிதடி
இந்நிலையில், சுபிதா மீண்டும் தனது கள்ளக்காதலான அனிஷுடன் வீடியோ காலில் பேசி கொண்டிருந்ததை, அவரது சித்தப்பா ராஜேஷ் பார்த்து ஆவேசமாகி அருகில் கிடந்த கம்பியால் ஓங்கி அடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அதே கம்பியை பிடுங்கி சுபிதா, சித்தப்பாவின் தலையில் ஓங்கி தாக்கியதாகவும் தெரிகிறது. இதனை வீடியோ காலில் பார்த்து கொண்டிருந்த அனிஷ், கள்ளக்காதலியின் வீட்டுக்கு புறப்பட்டு வந்து வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்த ஆத்திரத்தில் இருந்த சித்தப்பா ராஜேஷ், கம்பியால் சுபிதாவின் மார்பில் ஓங்கி அடித்தும், அரிவாளால் தலை மற்றும் கையில் வெட்டியதாகவும் சொல்லப்படும் நிலையில், படுகாயமடைந்த சுபிதா ரூம்முக்குள் சென்று தாழிட்டு கொண்டார். ஊருக்கு சென்றுவிட்டு காலையில் வீடு வந்த சுபிதாவின் தாய், தனது மகள் அறையை விட்டு வெளியே வராததால் பதற்றமடைந்து ராஜேஷையே அழைத்து வந்து பார்த்தபோது, தான் சுபிதா சடலமாக கிடந்தது தெரியவந்தது.

ராஜேஷ் சரண், கைது
இதுகுறித்து போலீசார் விசாரித்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என அறிந்த ராஜேஷ் தானாகவே காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்திருக்கிறார். இதனையடுத்து சித்தப்பாவின் தாய் அளித்த புகாரின் பேரில் ராஜேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved