Also Watch
Read this
By: Manigandan Raja

பூக்குழி திருவிழா :
ராஜபாளையம் அருகே சேத்தூரில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த மாதம் 21 ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 தினங்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் சப்பர வீதி உலா நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இன்று மாலை நடைபெற்றது. காலை 7 மணி அளவில் அம்மன் தட்டு சப்பரத்திலும் பிற்பகல் 4 மணிக்கு மேல் அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.
பின்னர் மாலை நேரம் பூச் சப்பரத்தில் நடைபெற்ற அம்மன் வீதி உலாவிற்கு பிறகு, சேத்தூர், ராஜபாளையம், முகவூர், முத்துசாமிபுரம், தளவாய்புரம், கிருஷ்ணாபுரம், செட்டியார் பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தியும், கரகம் சுமந்தவாறும், குழந்தைகளை ஏந்தியவாறும் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி திடலை சுற்றி நின்று சாமி தரிசனம் செய்தனர். சேத்தூர் காவல் துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்வுக்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தளவாய்புரம் வழியாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved