பள்ளி மாணவன் கடத்தல் : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் நாகமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 140 மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று மதியம் உணவு இடைவேளையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் மாமா என கூறி இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவனை இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் வைத்து அழைத்து சென்று சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சி மாவட்டம் கோசுகுறிச்சியில் மாணவனின் கழுத்தில் கிடந்த தங்க தாயத்தை கழட்டிக் கொண்டு அங்கேயே இறக்கி விட்டு சென்றுள்ளார். அங்கு தனியாக பள்ளி சீருடையில் நின்ற மாணவனை அப்பகுதியினர் விசாரித்தபோது நடந்ததை கூறி உள்ளார்.உடனே துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து போலீசார் பெற்றோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு பள்ளி சென்று ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். ஆசிரியர்கள் மாணவன் பள்ளியில் இல்லை என்பதை அறிந்தனர். உடனே துவரங்குறிச்சி சென்று பெற்றோர் மாணவனை மீட்டு வந்துள்ளனர்.இதுகுறித்து மாணவனின் பெற்றோர் புழுதிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் போலீசார் கடத்தி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். மேலும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவம் தெரிந்த பெற்றோர்கள் முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவன் கடத்தப்பட்டு இருப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பள்ளி எதிரே 20 அடி ஆழமுள்ள கோவில் குளம் உள்ளதால் உடனடியாக சுற்றுசுவர் அமைத்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் இல்லை என்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனவும் உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மாணவனை தங்க தாயத்திற்காக கடத்தி சென்றானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர். Related Link ஆம்புலன்ஸ்களை தவறாக பயன்படுத்தியதாக புகார்