Also Watch
Read this
By: Manigandan Raja
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ளது.
மறைந்த ரத்தன் டாடாவின் சிலையை திறந்து வைத்து கார் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ரேஞ்ச் ரோவரை ஓட்டிப் பார்த்த முதல்வர்
கார் உற்பத்தியை தொடங்கி வைத்த கையோடு, ரேஞ்ச் ரோவர் காரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்கிப் பார்த்தார். ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் இயக்கத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரிய தொழில்களை தொடங்குவதற்கான கால அளவை பாதியாகக் குறைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் என்பதற்கு டாடா உற்பத்தி ஆலையே சாட்சி என்றும் புகழாரம் சூட்டினார்.

ராணிப்பேட்டையில் உற்பத்தி ஆலை, 5000 பேருக்கு வேலை
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, நிகழ்ச்சியில் பேசியதாவது:

தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது.

முதலீடு செய்ய அழைப்பு
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடு, மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். டாடா நிறுவனம் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

உலக நாடுகளோடு நாம் போட்டி
மற்ற மாநிலங்களைத் தாண்டி உலக நாடுகளோடு நாம் போட்டி போடுகிறோம். ஏற்கனவே லீடராக இருக்கும் துறையில், இன்னும் பெரிய சாதனைகளை நாம் செய்ய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டால் போதாது, அதை உடனே செயல்படுத்த வேண்டும்.

விரைவான செயல்பாடு, அனுமதி, ஒப்புதல்
அடிக்கல் நாட்டப்பட்டு 16 மாதத்திலேயே கார் ஆலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு எந்த அளவுக்கு தொழில்செய்ய ஏற்ற மாநிலம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. அரசின் செயல்பாட்டை எடுத்துக் காட்டும் வகையில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படவுள்ளது. விரைவான செயல்பாடு, அனுமதி, ஒப்புதல், வணிக பிரிவு செயல்பாடுகளை மாநாட்டில் காட்டப்போகிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved