Also Watch
Read this
By: Fyrose Banu

இந்தியா தனது எரிவாயு தேவையில் சுமார் 60% - 62% அளவை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, எரிவாயு கொண்டு வரும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மீண்டும் விறகு அடுப்பிற்கு மாறும் உணவகங்கள்
தட்டுபாட்டின் காரணமாக முன்பதிவு செய்தாலும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒருபுறம் விலை உயர்வு, மறுபுறம் தட்டுப்பாடு இதன் காரணமாக, உணவகத் தொழில் கடுமையாகப் பாதித்துள்ளது. போதிய சிலிண்டர்கள் கிடைக்காததால், வேறு வழியின்றி மீண்டும் பழைய முறைப்படி விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
விறகு அடுப்பில் சமைப்பது கடினம் தான்
இந்த நிலையில் சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள், தற்போது விறகு அடுப்புகளைத் தேடிச் சென்றுள்ளன. மேலும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் உணவின் விலையும் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது இது குறித்து உணவக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் "சிலிண்டர் விலையே ஏற்கனவே அதிகம். இப்போது காசு கொடுத்தாலும் சிலிண்டர் கிடைப்பதில்லை. விறகு அடுப்பில் சமைப்பது கடினம் தான், புகை வரும், சமையல் செய்ய கூடுதல் நேரமாகும். ஆனால், கடையை மூட முடியாது என்பதால் வேறு வழியின்றி இதைப் பயன்படுத்துகிறோம்," என வேதனையுடன் தெரிவிக்கிறார்.
சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை
விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதால் உணவின் தரம் மாற வாய்ப்புள்ளதோடு, சமையலறையில் வெப்பம் அதிகரிப்பதால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத சூழலும் ஏற்படும். மேலும், விறகுகளுக்கான தட்டுப்பாடும் விலையும் கூட தற்போது உயரத் தொடங்கியுள்ளது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது."அத்தியாவசியத் தேவையான எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved